குற்றாலத்தில் டாஸ்மாக்குக்கு எதிர்ப்பு- கல்லூரி மாணவிகள் நடத்திய ஆய்வில் சுற்றுலாப் பயணிகள் கருத்து
குற்றாலம்: மதுக்கடைகளால் சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவது குறித்து தனியார் கல்லூரி மாணவிகள் நடத்திய ஆய்வில் பெரும்பாலானோர் அந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் குற்றாலத்தில் தற்போது சீசன் காலமாகும். இந்த நாட்களில் சுமார் 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பொருளாதாரத்துறை மாணவிகள் "குற்றாலம் ஒரு ஆய்வு"எனும் தலைப்பில் கல்லூரி முதல்வர் ராஜேஷ்வரி தலைமையில் பேராசிரியைகள் மேற்பார்வையில் குற்றாலம், ஐந்தருவி ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
எந்தெந்த அடிப்படையில்...
சுகாதாரம், அடிப்படை வசதிகள்,தங்கும் வசதி, உணவகங்கள், திருடர்கள் தொல்லை, வாகன நிறுத்தும் இடத்திற்கான கட்டணங்கள், உடைமாற்றும் அறை வசதிகள், பொழுது போக்கு வசதிகள், அருவிகளுக்கு செல்லும் பாதைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம், குற்றாலத்தின் அழகை பாதுகாக்கும் ஆலோசனைகள் கழிவறை வசதி , உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தனியாக வருபவர்கள், நண்பர்களோடு வருபவர்களிடம் கேட்டு படிவத்தில் நிரப்பி ஆய்வு செய்தனர்.
உடை மாற்றும் வசதி..
இதில் எராளமான பெண்கள் மாணவிகளின் கேள்விக்கு பெண்கள் உடைமாற்றும் அறை வசதிகள் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்தனர்.
குடிகாரர்களிடம் இருந்து பாதுகாப்பு
மேலும் குளிக்க வரும் ஆண்கள் குடித்து விட்டு பண்ணும் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளதாகவும், பலர் குளித்து, குடித்து கும்மாளம் போட்டு வருவதாகவும், அவர்களிடமிருந்து பாதுகாப்பு தேவை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
டாஸ்மாக் மூட வேண்டும்
அங்குள்ள இரண்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்த கள ஆய்வு அறிக்கையாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஒப்படைக்கப் படும் என்று மாணவிகள் தெரிவித்தனர்.