திருச்சியில் வீடு புகுந்து பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
திருச்சி: திருச்சியில் வீடு புகுந்து பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் முருகேசனை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சுமித் சரண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா. இவர் சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய முருகேசன் என்பவர் மீது புகார் கொடுத்திருந்தார்.

இதை தொடர்ந்து முருகேசன் தென்காசி அருகேயுள்ள சுரண்டை காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி நள்ளிரவு திருச்சியில் கே.கே.நகரில் உள்ள வீட்டில் பரிமளா மட்டும் தனியாக இருந்த போது இன்ஸ்பெக்டர் முருகேசன் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பரிமளா புகார் செய்தார்.
இது குறித்து கண்டோன்மெண்ட் மகளிர் போலீசார் இன்ஸ்பெக்டர் முருகேசன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்ஜாமீன் பெற்றார்.
இதற்கிடையே பரிமளா இன்ஸ்பெக்டர் முருகேசனை அவர் ஜாமீன் பெறும் வரை கைது செய்யாமல் போலீசார் காப்பாற்றுவதாகவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிமளா குற்றம் சாட்டிருந்தார்.
இன்ஸ்பெக்டர் முருகேசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து சஸ்பெண்டு செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து பரிமளா உண்ணாவிரதம் இருக்க முயன்றார். அவரை பெண் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 3 இல் பரிமளா நேற்று ஆஜரானார். அங்கு நீதிபதி அல்லி முன்பு இன்ஸ்பெக்டர் முருகேசன் பற்றி அவர் காலை 11.30 மணி முதல் சுமார் 1 மணி நேரம் வரை ரகசிய வாக்கு மூலம் அளித்தார்.அதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்டம் மங்கலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியில் இருந்த முருகேசனை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சுமித்சரண் சஸ்பெண்ட் செய்து நேற்று இரவு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications