காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது: தினகரன்
Recommended Video
தேனி: தமிழகத்தில் தற்போதைய அரசு இருக்கும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்று ஆர்.கே நகர் சட்டசபை உறுப்பினர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருபது நாட்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை அதற்கான எந்த வித அறிகுறியும் தென்படவில்லை.
இதுகுறித்து தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் போராட்டமும் நடந்து வருகிறது.
மத்திய அரசு தாமதம்
இந்நிலையில், டி.டி.வி தினகரன் தேனியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயிகள் நலன் கருதியாவது, மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உரிய காலத்திற்குள் அமைக்க வேண்டும். ஆனால் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், அது முடியும் வரை காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை இல்லை. ஓ.பி.எஸ் -ஈ.பி.எஸ் தலைமையிலான அரசு இருக்கும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது.
மிகவும் மோசமான நிர்வாகம்
இந்த ஆட்சி மக்களுக்கு எந்த வித நல்லதும் செய்யவில்லை. நாங்கள் ஆட்சி அமைத்தால், மதுக்கடைகளை எந்த அளவுக்கு குறைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு குறைப்போம். ஜெயலலிதா இறப்புக்கு பிறகு பன்னீர்செல்வத்தை முதல் அமைச்சராக்கியது சசிகலா. எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் சேர்ந்து ஆக்கினார்கள் என்றால், அவர் தர்மயுத்தம் நடத்திய போது 11 பேர் தானே அவருடன் சென்றார்கள். அவருடைய உண்மையான சுயரூபம் வெளிப்பட்டதால் தான் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அரசியல் வெற்றிடம்
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் புதிய கட்சி குறித்து அறிவிக்கப்படும். தீர்ப்புக்காகவே நாங்கள் காத்து இருக்கிறோம். தமிழகத்தின் தற்போதைய துரோக ஆட்சியைக் கலைப்பதே எங்கள் ஒரே இலக்கு. அதை நோக்கி எங்கள் பயணம் இருக்கும். புதியவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதில் யாரை வைத்து அரசியல் வெற்றிடத்தை நிரப்பலாம் என்பதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
தகுதி நீக்க வழக்கு
இப்பவும் அ.தி.மு.க.வில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் என்னை ஆட்சி அமைக்க வருமாறு அழைக்கிறார்கள். எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வருவதற்காகக் காத்து இருக்கிறோம். விரைவில் தீர்ப்பு வந்ததும், சசிகலா உத்தரவுப்படி யார் முதல்வர் ஆக வேண்டும் என்று தீர்மானித்து அதன்படி ஆட்சி நடத்துவோம் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.