அதிமுக ஆட்சிமன்ற குழுவில் "கைதி"க்கெல்லாம் இடமிருக்கு.. எடப்பாடிக்கு இல்லையா??
அதிமுகவில் சசிகலா தலைமையிலான ஆட்சிமன்ற குழுவை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதில் எடப்பாடி பழனிச்சாமி இடம்பெறாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: அதிமுக ஆட்சிமன்ற குழுவில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். சசிகலா தலைமையிலான புதிய ஆட்சிமன்ற குழுவை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இந்த குழுவில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் இடம்பெறாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணிக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலுடன், அதிமுக ஆட்சிமன்ற குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார் தினகரன். அதில் பொதுச்செயலாளர் சசிகலா குழு தலைவராக செயல்படுவார் என்றும் கூறியுள்ளார்.
ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களாக அதிமுக அவைத்தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, மருத்துவ அணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால், சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ஏ.ஜஸ்டின்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சசிகலா தலைவர்
ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்த போது ஆட்சிமன்ற குழுவில் ஜெயலலிதா தலைவராகவும், குழு உறுப்பினர்களாக மசூதுதனன், ஓ.பன்னீர்செல்வம், வேணுகோபால், ஜஸ்டின்ராஜ், தமிழ்மகன் உசேன் ஆகிய 5 பேர் இருந்தனர். தற்போது ஜெயலலிதா இருந்த இடத்தில் சசிகலா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எடப்பாடி பெயர் இல்லையே?
ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் ஆகியோர் நீக்கப்பட்டு செங்கோட்டையன், வளர்மதி ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக டி.டி.வி.தினகரன் பெயரும் இடம் பெற்றுள்ளது. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி புறக்கணிப்பு
ஆளும் கட்சியில் மிக முக்கிய பதவியில் அதுவும் முதல்வராக இருக்கும் பழனிச்சாமியின் பெயர் இடம்பெறாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆட்சி மன்றக் குழுதான், ஆர்.கே.நகரில் நடக்க உள்ள இடைத் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளது. எனவே முக்கியமான குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணிக்கலாமா என்று அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். முதல் முறையாக முதல்வர் எடப்பாடியை தினகரன் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளார்.
திடீர் புறக்கணிப்பு ஏன்?
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்தே நலத்திட்டங்களை தொடக்கிவைப்பது, பிரதமரை சந்திப்பது என தனியாக இயங்கி வருவதாக தெரிகிறது. ஆனால் தம்மை ஒரு நிழல் முதல்வராகவே வெளிப்படுத்தி வரும் தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பல கட்டளைகளை போட்டுள்ளார். அவற்றை எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்தாத காரணத்தினாலே ஆட்சிமன்ற குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை டிடிவி தினகரன் புறக்கணித்துள்ளதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நிலை நீடித்தால் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் எத்தனை நாளைக்கு முதல்வராக நீடிப்பாரோ என்ற சந்தேகம் அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது.