ஊரறிந்த மோசடி பேர்வழியிடம் ஏமாந்து போன தினகரனா அதிமுகவுக்கு தலைமை? அதிர்ச்சியில் தொண்டர்கள்
சென்னை: ஊருக்கே தெரிந்த ஒரு ஏமாற்று பேர்வழியிடம் கட்சி சின்னத்தை மீட்க பணம் கொடுத்து ஏமாந்துள்ளார் டிடிவி தினகரன்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தார்.
டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை இதை கண்டுபிடித்து சுகேஷை கைது செய்தது. அவரிடம் இருந்து ரூ1.30 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சுகேஷ் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின்போது, சுகேஷ் சந்திரசேகர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். எனவே தினகரன் மீதான பிடி இறுகியது.
தினகரனிடம் விசாரணை
டிடிவி தினகரன் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் கடந்த 3 நாட்களாக போலீசாரால் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்றும் மாலையில் ஆஜராக தினகரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் முதலில் தனது குற்றத்தை மறுத்த தினகரன் பிறகு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
குறிப்பாக, சுகேஷூக்கும் தினகரனுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களை போட்டுக் காட்டிய பிறகு வேறு வழியின்றி தினகரன் ஒப்புக்கொண்டாராம்.
நீதிபதியாக அறிமுகமாம்
புரோக்கர் சுகேஷ் தம்மை ஒரு நீதிபதியாக அறிமுகப்படுத்திக்கொண்டு தினகரனிடம் பேரம் பேசியது தெரியவந்துள்ளது. டெல்லியில் இதைப்போல பல போலி புரோக்கர்கள் வலம் வருகிறார்கள். அவர்கள் நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம், அமைச்சர்கள் மட்டத்தில் தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக காட்டிக்கொண்டு, வலம் வந்து லாபி செய்வார்கள்.
ஊரறிந்த பேர்வழி
அதிலும், சுகேஷ் சந்திரா என்பவர் ஊரறிந்த ஏமாற்று பேர்வழி. திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் எனக் கூறிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டார். அதேபோல கர்நாடகாவிலும் பல அரசியல் தலைவர்களின் உறவினர் என கூறி மோசடி செய்திருந்தார் இந்த பெங்களூர் பேர்வழி. இதுதொடர்பாக ஏற்கனவே பெங்களூர் போலீசார் இவரை கைது செய்திருந்தனர்.
அதிமுக இவரை நம்பியா
சுகேஷ் சந்திரசேகர் முகத்தை பார்த்தாலே அவர் எப்படிப்பட்வர் என்பதை சாமானியர்களும் புரிந்துகொள்ள முடியும். மேலும் சுகேஷ் சந்திரசேகர் படத்தை கூகுள் செய்தால் கூட அவரது பழைய கைது சம்பவங்களின் ஊடக செய்திகள் வந்து கொட்டியிருக்கும். ஆனால் அவரை நீதிபதி என நம்பி இவ்வளவு பெரிய தொகையை தினகரன் கொடுத்தது ஆச்சரியம் ஏற்படுத்துகிறது.
தொண்டர்கள் அதிர்ச்சி
அதிமுகவை வழிநடத்த தனக்கு அடுத்தபடியாக சசிகலா நம்பியது டிடிவி தினகரனைத்தான். அவர் திறமைசாலி, அறிவாளி என்ற எண்ணம் அதிமுகவிலுள்ள சசிகலா ஆதரவாளர்களுக்கு உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட ஒருவர், ஒரு புரோக்கரிடம் ஏமாந்துபோனது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அவரது ஆதரவாளர்களுக்கு. இவரது கட்சியில் அதிமுக எப்படி செயல்படப்போகிறது என்ற சந்தேகம் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.