அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக அதிகாரத்தில் ஊடுருவும் பாஜக.. கோபம் கக்கும் தினகரன்!
ஆளுநர் ஆய்வு நடத்துவது என்பது அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக அரசு அதிகாரத்தில் ஊடுறுவும் பிஜேபியின் பாணி இது என்று டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஆளுநர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக அரசு அதிகாரத்தில் ஊடுறுவும் பிஜேபியின் பாணி இது என்று டிடிவி. தினகரன் விமர்சித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோயம்புத்தூரில் நடத்திய திடீர் ஆய்வு அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அரசியல் கட்சியினர் கொந்தளிக்கின்றனர். இந்நிலையில் ஆளுநரின் ஆய்வு குறித்து அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் : புதுச்சேரி மற்றும் டெல்லியில் துணைநிலை ஆளுனர்களின் தலையீட்டால் எப்படி நிர்வாகம் ஸ்தம்பித்திருக்கிறதோ அதே நிலை தமிழகத்திற்கும் வரலாம். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அரசு அதிகாரத்தில் ஊடுறுவும் பி.ஜே.பி.யின் பாணி இது போலும்.
இது தான் அதிமுக கொள்கையா?
தமிழகத்தில் இப்போது நடப்பது அம்மாவின் ஆட்சி அல்ல என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. அம்மா ஒருபோதும் இதுபோன்ற ஆய்வுகளை அனுமதிக்க மாட்டார். மாநில சுயாட்சியை எல்லா நிலைகளிலும் உறுதிப்படுத்துவதே அ.தி.மு.க.வின் கொள்கை.
முன்னோட்டம் தான் இது
தமிழக ஆளுனரின் ஆய்வு மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது. மக்கள் விரோத பழனிச்சாமி அரசு வீட்டுக்குப் போக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஒட்டுமொத்த விருப்பம். அதற்கான முன்னோட்டமாகத்தான் இதைப் பார்க்க வேண்டி இருக்கிறது.,
|
சுயநலத்தில் மட்டும் கவனம்
இதுபோன்ற ஆய்வுகள் வரவேற்கப்பட வேண்டியது என்று அமைச்சர்கள் சொல்வது வெட்கக்கேடானது. இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய முதல்வர் பழனிச்சாமி தனது சுயநலத்தில் மட்டுமே கவனமாக இருக்கிறார்!
நலன்கள் பறிபோகின்றன
முதல்வர் பழனிச்சாமியின் அரசு, தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, மாநிலத்தின் நலன்களை அடகு வைக்க துளியும் தயங்காது என்பதையே ஆளுனரின் ஆய்வு உணர்த்துகிறது. நீட் தேர்வு முதல், தொடர்ந்து தமிழகத்தின் நலன்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன என்று தினகரன் கூறியுள்ளார்.