எடப்பாடி பதவி நீக்கம் எதிரொலி... சேலத்தில் தினகரன் உருவபொம்மை எரிப்பு!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்சி பதவியை பறித்ததையடுத்து, சேலத்தில் தினகரன் உருவபொம்மை எரிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சேலம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியதற்காக தினகரன் கொடும்பாவியை எரித்து அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக கட்சியிலிருந்து பிரிந்து போன ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதை அடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதனையடுத்து அந்த 19 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வதாக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்தார்.
அதற்கு எதிர்ப்பு நடவடிக்கையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அளித்த கட்சிப் பதவியான சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை நீக்குவதாக தினகரன் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சேலம் அயோத்திபட்டினம், ஐந்து ரோடு பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தினகரன் கொடும்பவியை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.