முதல்வராக ஆசையில்லையாம்.. தேர்தலில் போட்டியாம்.. தமிழக மக்களை ஏமாளிகள் என நினைக்கிறாரா தினகரன்?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி வேட்பாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டது, எடப்பாடியிடம் உள்ள முதல்வர் பதவியை பிடிப்பதற்கான காய்நகர்த்தலே என்று அரசியல் நோக்காளர்கள் கருதுகின்றனர்.
சென்னை: ராதாகிருஷ்ணன் நகர் இடைதேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் எடப்பாடியின் சீட்டை பிடிப்பதற்கான அச்சாரம் என்று அரசியல் நோக்காளர்கள் கருதுகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவர் 32 ஆண்டுகள் கட்டிக் காத்த அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஒன்று சசிகலா அணி, மற்றொரு ஓபிஎஸ் அணி. இருவரும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

பலமுனை போட்டி
இந்தத் தேர்தலில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, திமுக, தீபா பேரவை, எம்ஜிஆர் அண்ணன் மகன் சந்திரனின் புதிய கட்சி உள்ளிட்டவை போட்டியிடவுள்ளன. பாமக போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது.

இரட்டை இலை யாருக்கு?
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை ஓ.பன்னீர் செல்வம் அணி நாடுகிறது. சசிகலா அணியோ இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் என்கிறது.

அதிமுக ஆட்சி மன்றக் குழு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து ஆலோசனை செய்வதற்காக அதிமுக ஆட்சி மன்றக் குழு இன்று கூடியது. அதில் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

முதல்வர் பதவி ஆசை இல்லை
இந்த தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்று பெறுவேன் என்று கூறியுள்ள தினகரன், தமக்கு முதல்வர் பதவியில் ஆசை இல்லை என்றும் எடப்பாடிதான் முதல்வர் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் பதவிக்கான காய் நகர்த்தல்
தினகரன் அவ்வாறு கூறினாலும் ஒருவேளை ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்றால் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய ஓ.பன்னீர் செல்வம் நிர்பந்திக்கப்பட்டதை போல எடப்பாடியையும் வலியுறுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

மன்னிப்புக் கடிதம்
கடந்த காலங்களில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஜெயலலிதாவிடம் வழங்கிய மன்னிப்புக் கடிதத்தில் தான் எந்த சூழ்நிலையிலும், ஆட்சியிலும், கட்சியிலும் பொறுப்பையோ, பதவியையோ கேட்க மாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

கட்சியினர் வலியுறுத்தல்
ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ஏற்றுக் கொண்டார். அதேபோல் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தியதால் அதிமுக எம்எல்ஏ-க்கள் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுநடக்காமல் போய், பெங்களூர் சிறையில் உள்ளார்.

தாயை போல் பிள்ளை
ஒரு வேளை தினகரன் வெற்றி பெற்றால், கட்சி நிர்வாகிகளை சித்தி சசிகலா தூண்டி விட்டு நோகாமல் கட்சிப் பதவியையும், ஆட்சி பதவியையும் பிடிக்க முனைந்தாரோ, அதேபோல் அவரது ரத்தமான தினகரனும் அதே சாணக்கியத்தனத்தை கையாளவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏற்கெனவே 3 மாதங்களில் 3 முதல்வர்களை சந்தித்த தமிழகம் 4-ஆவதாக ஒரு முதல்வரையும் சந்திக்க நேருமா என்பது ஆர்.கே. நகர் மக்களின் கையில்தான் உள்ளது.

எடப்பாடியார் பதவிக்கு ஆபத்து
முதல்வர் பதவிக்கு தான் ஆசைப்படவில்லை என தினகரன் இன்றைய பத்திரிகை பேட்டியில் கூறினார். அப்படியானால் இவர் சட்டசபை தேர்தலில் ஏன் போட்டியிட வேண்டும்? என்ற கேள்விக்கு பதில் இல்லை. அரசியலில் வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தம். அதுபோல் முதல்வர் பதவி தனக்கு வேண்டாம் என்று தினகரன் கூறினால், அதற்கு வேண்டும் என்பது அர்த்தம் என்பது மூத்த அமைச்சர்களுக்கு தெரியாதா என்ன?












Click it and Unblock the Notifications