முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மடியில் கனம் இருக்கிறது... தினகரன் பொளேர்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மடியில் கனம் இருப்பதால் பயம் காரணமாக என்னை ஒதுக்கிவைத்துவிட்டு சுதந்திரமாக செயல்பட நினைக்கிறார்கள் என்று டிடிவி. தினகரன் சாடியுள்ளார்.
தஞ்சாவூர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மடியில் கனம் இருப்பதால் பயப்படுவதாக அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் சாடியுள்ளார்.
தம்மை நீக்குவதாக எடப்பாடி கோஷ்டி முடிவு செய்திருப்பது தொடர்பாக தஞ்சையில் டிடிவி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். நான் வீட்டில் இருந்த போது அதிமுகவினர் வந்து என்னை சந்தித்து விட்டு சென்றனர்.

தவறாக சொல்கிறார்கள்..
இதன் அடுத்தகட்டமாக தொண்டர்களை சந்திக்கச் செல்கிறேன். கட்சியின் சட்டதிட்ட விதிகள் தெரிந்தும் தவறாகச் சொல்கிறார்கள்.

நியமனம் செல்லும்
சசிகலாவை நியமனம் செய்தது சட்டவிதிக்கு உட்பட்டது தான் என்று ஒப்பு கொண்டிருக்கிறார்கள். அப்படி சசிகலா நியமனம் செல்லுபடியாகும் போது அவரால் நியமிக்கப்பட்ட என்னுடைய பதவியும் செல்லும்.

சீனிவாசன்
சசிகலாவால் நியமிக்கப்பட்ட பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கையெழுத்திட்டு கட்சிப் பெயரில் வங்கியில் உள்ள பணத்தை செயல்படுத்த முடிகிறது. அப்படியானால் என்னுடைய நியமனமும் செல்லும்.

துணை பொதுச்செயலர்
ஆர்.கே.நகர் தேர்தலில் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதன் அடிப்படையிலேயே அதிமுக அம்மா அணி என்ற பெயரை நான் கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் பெயரையும், சின்னத்தையும் கேட்டுப் பெற்றேன்.

அம்மா அணி மட்டுமே
ஜெயலலிதா இறந்த அசாதாரண சூழலில் சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அவர் நியமித்த துணைப்பொதுச்செயலாளர் என்ற என்னுடைய பதவியும் செல்லுபடியாகும். ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி என்றெல்லாம் எதுவும் கிடையாது. முதல்வர் பழனிச்சாமி அணி என ஒன்று கிடையாது சசிகலாவால் செயல்படுத்தப்படும் அதிமுக அம்மா அணி தான் இருக்கிறது.

கட்டுப்பாட்டில்தான்...
பயத்தின் காரணமாக ஒரு சிலர் செயல்படுகின்றனர், அதனால் கட்சி என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்று சொல்லிவிட முடியாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மடியில் கனம் இருக்கிறது. கட்சி வளர்ச்சிக்கு எதிராக செயல்படும், பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தால் போதும் என்று நினைக்கும் சுயநலவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது.

எங்க ஆட்சி
தற்போது நடப்பதே நாங்கள் உருவாக்கிய ஆட்சி தான், தேவைப்பட்டால் முதல்வர் பழனிசாமி மீதே நடவடிக்கை எடுக்கப்படும். பதவியில் இருக்கும் சில பேர் தங்கள் மடியில் கனம் இருப்பதால் அதில் இருக்கும் பயத்தால் எங்களை ஒதுக்கி வைத்துவிட்டால் சுதந்திரமாக செயல்படலாம் என்று நினைக்கிறார்கள். ஏமாற்று பேர்விழிகள் சொல்வதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள முடியாது,
இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications