தினகரன் ஆதரவாளர் முதல்வர் எடப்பாடியாருக்கு கொடுத்த வரவேற்பு... பெரம்பலூரில் பரபரப்பு
டிடிவி தினகரன் ஆதரவாளர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு கொடுத்த விவகாரம் அதிமுக அணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர்: தினகரன் அணியில், கொள்கை பரப்பு துணைச் செயலராக நியமிக்கப்பட்ட, முன்னாள், எம்.பி., இளவரசன், திருச்சியில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசியது, அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரில் நேற்று, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் பழனிச்சாமி சென்னையிலிருந்து விமானத்தில், திருச்சி வந்தார்.
விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் அறையில், முன்னாள், எம்.பி., இளவரசனும் வந்து, முதல்வர் பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதை புன்முறுவலோடு வாங்கிக் கொண்டதும் அருகில் இருந்த எடப்பாடி அணியினர் பரபரப்பு அதிர்ச்சியில் மூழ்கினர்.
எடப்பாடி பழனிசாமி அணிக்கு செக் வைக்கும் வகையில், தினகரன் வெளியிட்ட பட்டியலில் முன்னால் எம்.பியும் அரியலூர் இளவரசனுக்கு, அ.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு துணைச் செயலர் பதவியும் அளிக்கப்பட்டிருந்தது.
பதவி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, எடப்பாடியை வரவேற்று அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை கொடுத்தது அதிமுகவின் இப்போதைய ஹாட் டாபிக் விவாதமாக உள்ளது.
டிடிவி தினகரன் வெளியிட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிலர், தினகரனே நியமனம் செய்யப்பட்டதே முறைகேடானது அதனால் எங்களுக்கு இந்த பதவி தேவையில்லை என்று மறுத்து அறிக்கை வெளிட்டனர்.
இந்த நிலையில் தான் தினகரனால் பதவி வழங்கப்பட்டவர் சால்வை அணிவித்ததை எடப்பாடி ஏற்றுக்கொண்டதும் பெரம்பலூர் நிகழ்ச்சிக்கு கூடவே அழைத்துச் சென்றதும் நிகழ்ச்சியில் இளவரசன் கலந்து கொண்டது தினகரன் தரப்பை கொஞ்சம் அதிர வைத்துள்ளது.
இது தொடர்பாக பேசிய இளவரசன், ' கட்சியின் பொதுச்செயலாளர் எனக்கு பதவி அளித்துள்ளார். நாங்கள் எல்லாரும், அ.தி.மு.க.,வில் தான் இருக்கிறோம். ஆகையால், மரியாதை நிமித்தமாக முதல்வரைச் சந்தித்தேன்.
செங்கோட்டையன், சீனிவாசன் ஆகியோர் கூட, பொதுச்செயலராக உள்ள சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்கள் தான். அதைப்போலத்தான் நானும் இப்போது பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளேன். இதனைத் தொடர்ந்து தினகரனையும் சந்திக்க உள்ளேன்" என்று தெரிவித்தார்.