தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டம் வழக்கம் போல மூன்றே நிமிடங்களில்...!
தூத்துக்குடி: வழக்கம் போல தூத்துக்குடி மாநகரட்சிக் கூட்டம் கூச்சல் குழப்பங்களுடன், அமளி துமளிகளுடன் 3 நிமிடங்களிலேயே நடந்து முடிந்தது.
திமுக, அதிமுக கவுன்சிலர்களின் கடுமையான கூச்சல், குழப்பத்திற்கு கூட்டம் முடிவதாக மாநகராட்சி மேயர் அறிவித்து விட்டு வெளியேறினார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் அவசரக்கூட்டம் மேயர் (பொறுப்பு) சேவியர் தலைமையில் இன்று மாலை நடந்தது. கூட்டத்தில் கமிஷனர் மதுமதி, மாநகராட்சி பொறியாளர்கள், அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
முதல்வருக்கு நன்றி
கூட்டம் துவங்கியவுடன், தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சி, சாலை வசதி, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதாளசாக்கடை விரிவாக்க திட்டம் போன்றவற்றை செயல்படுத்த ரூ.320கோடி ஒதுக்கியுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி என்று மேயர் சேவியர் கூறினார்.
காட்டுராஜா தலைமையில்
இந்தநேரத்தில், திமுக உறுப்பினர்கள் கொறடா காட்டுராஜா தலைமையில் எழுந்து, வர இருக்கிற மாநகராட்சி மேயர் தேர்தலை முன்னிட்டே இதனை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது என்று புகார் தெரிவித்தனர். இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தீர்மானங்கள் வாசிப்பு
இதனைத் தொடர்ந்து, தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. வல்லநாடு நீரேற்று நிலையத்தில் குடிநீர் கொண்டுவரப்படும் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய ஒரு லட்சத்து 54ஆயிரத்து 571ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட தீர்மானம் 4க்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வளவு செலவு செய்ததாக கூறப்பட்டாலும் தூத்துக்குடி மாநகர மக்களுக்கு 10நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைப்பதே அரிதாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
குழாய் உடைப்பைச் சரி செய்ய...
இதற்கு பதில் அளித்த கமிஷனர் மதுமதி, பொதுவாக குழாய் உடைப்புகளை சரி செய்ய குறைந்தது 24மணிநேரம் முதல் 36மணிநேரம் வரை என இரண்டு நாட்கள் ஆகும். இதனால் தான் மக்களுக்கு தாமதமாக குடிநீர் வழங்கப்படுகிறது என்றார.
ஆல் பாஸ்.. ஆல் பாஸ்!
இந்த பதிலை ஏற்காமல் திமுக உறுப்பினர்கள் கடும் வாதம் செய்ய அதிமுக உறுப்பினர்கள் வழக்கம்போல எதிர்வாதம் செய்ய ஆல்பாஸ் என்ற ரீதியில் 25தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
பெல்லடித்து வெளியறிய சேவியர்
நீண்டபெல்லை மேயர்(பொறுப்பு) சேவியர் அடிக்க கூட்டம் வழக்கம்போல மூன்று நிமிடத்தில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. வழக்கம்போல திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு கோஷம் போட்டபடியே கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
என்ன கூட்டமாக இருந்தாலும் சரி.. 3 நிமிடம்தான்!
தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை அது சாதாரண கூட்டமாக இருந்தாலும் சரி, அவசர கூட்டமாக இருந்தாலும் சரி குறைந்தது 3அல்லது 5நிமிடங்களில் நடந்து முடிவது என்பது வழக்கமாகிவிட, வார்டு உறுப்பினர்களுக்கும் அது பழக்கமாகி விட்டது.