தொழிற்சாலை கழிவுகளுடன் குளத்தில் தேங்கிய மழை நீரால் பயனில்லை... வேதனையில் தூத்துக்குடி மக்கள்!
தொழிற்சாலைக் கழிவால் குளத்தில் தேங்கிய மழை நீரை பயன்படுத்த முடியவ்லிலை என்று தூத்துக்குடி மாவட்டம் வேடநந்தம் பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்.
தூத்துக்குடி : ஓகி புயலால் பலத்த மழை பெய்து குளத்தில் தண்ணீர் தேங்கினாலும், அருகில் உள்ள வேதிப்பொருள் தொழிற்சாலை கழிவால் மழைநீர் நிறம் மாறி தூர்நாற்றம் வீசுவதால் பயன்படுத்த முடியவில்லை என்று வேடநந்தம் பகுதி பொது மக்களும், விவசாயிகளும் வேதனையில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் வேடநந்தம் அருகே கடந்த ஒகி புயலால் பலத்த மழை கொட்டியது. இதில் அங்குள்ள குளத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து கடல் போல் நீர் தேங்கியது. இதை பார்த்த பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி மழை நின்று போனதால் காணாமல் போனது.
கிடைத்த மழை நீரை வைத்து விவசாயமும், பிற தேவைகளையும் பூர்த்தி செய்து விடலாம் என்று நினைத்தனர். தற்போது தண்ணீர் நிறம் கரும்பச்சையாக மாறி விட்டதால் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் தண்ணீரில் கடும் தூர்நாற்றம் வீசுவதால் துணிகள் துவைக்க கூட அதை உபயோகப்படுத்த முடியாமல் பொது மக்கள் தவிப்பில் உள்ளனர்.
குளத்தின் அருகில் வேதி பொருள் தொழிற்சாலை இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்து கெமிக்கல் கலந்து தண்ணீர் மாசுப்பட்டதா அல்லது வேறு காரணமா என்று தெரியாமல் விவசாயிகளும் குழம்பி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் ஓட்டப்பிடாரம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தாசில்தார் நம்பிராயர் மற்றும் பிடிஓ குளத்தை பார்வையிட்டு ஆய்வுக்காக தண்ணீரை கொண்டு சென்றுள்ளனர். ஆய்வு முடிவு வரும் வரை குளத்து நீரை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களையும், விவசாயிகளையும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.