தூத்துக்குடி மாவட்டத்தில் தீயாக செயல்பட்ட எஸ்.பி அஸ்வின் கோட்னீஸ்... டிஐஜியாக பதவி உயர்வு!
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை எஸ்.பியாக பணியாற்றி வந்த அஸ்வின் கோட்னீஸ் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தூத்துக்குடி : தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வரும் அஸ்வின் கோட்னீஸ் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த 2015ம் ஆண்டு பொறுப்பேற்றக் கொண்டார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அஸ்வின் கோட்னீஸ். அவர் பொறுக்கேற்ற கால கட்டத்தில் அந்த மாவட்டத்தில் பல சாதீய மற்றும் பழிக்கப் பழியாக கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களும் சர்வசாதாரணமாக நடைபெற்று வந்தன.
ஆனால் இவற்றை கட்டுப்படுத்துவதற்காக பிரச்னைக்கான உண்மையான காரணங்களை ஆராய்ந்து, சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தவர்.
தூத்துக்குடியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று கிராம கண்காணிப்புக் குழு கூட்டங்கள் நடத்தி பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிவதோடு மக்களுக்கு காவல் துறையுடனான நல்லுறவை ஏற்படுத்தி, மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கினார்.
"பஸ்மார்ஷல்"
பள்ளி, கல்லூரிக்கு பேருந்தில் சென்று வரும் மாணவர்களிடையேயான மோதலை தடுக்க மாநிலத்திலேயே முதன்முறையாக பஸ் மார்ஷல் துவங்கினார். பேருந்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் நடவடிக்கையால் மாணவர்களிடையேயான மோதல் கட்டுப்படுத்தப்பட்டது.
தேங்கியிருந்த வாகனங்கள்
காவல் நிலையங்களில் தேங்கிக் கிடந்த இருசக்கர வானங்களை ஏல முறையில் விற்பனை செய்து அதில் கிடைத்த ரூ. 17 லட்சத்தை அரசிடம் ஒப்படைத்தார். பொதுமக்களுக்கு காவல்துறை மீது இருக்கும் அச்சத்தை போக்கும் விதமாக காவல் நிலையங்களில் வரவேற்பாளர்களை நியமித்து மக்களுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்கி வந்துள்ளார்.
சிசிடிவி கேமராக்கள் பொருத்த வலியுறுத்தல்
தூத்துக்குடியை முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கோட்னீஸ், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பிற்கு உத்தரவிட்டவர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமராவை நிறுவ வலியுறுத்தி சட்டம் ஒழுங்கு பணியை செம்மையாக கண்காணித்தும் வந்துள்ளார்.
நெருக்கம்
இதன் அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்களில் சிக்கும் சமூக விரோதிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இப்படி பல வகையிலும் பொதுமக்கள் காவல்துறை இடையேயான இடைவெளியை குறைத்ததில் முக்கிய பங்காற்றிய தூத்துக்குடி எஸ்பி அஸ்வின்குமார், இன்று டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.