20 தமிழர்கள் சுட்டுக்கொலை: ரூ.10 லட்சம் நிவாரணம் - மனித உரிமை ஆணையரிடம் தி.வேல்முருகன் மனு
சென்னை: 20 அப்பாவி தமிழக கூலித் தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையரிடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் திரு.தி.வேல்முருகன் புகார் மனு அளித்துள்ளார். கொல்லப்பட்ட 20 பேரின் குடும்பத்தினருக்கும் தலா பத்து லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் திருப்பதி அருகே உள்ள சேஷாசல வனப்பகுதியில் 20 அப்பாவி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கூலித் தொழிலாளர்களை சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி.வேல்முருகன், மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் அளித்துள்ள புகார் மனு:
காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழர்களின் உடல்கள் கிடந்த இடங்களுக்கு அருகில் தடைசெய்யப்பட்ட எந்த மரங்களும் கிடையாது. அவர்களின் உடல்களுக்கு அருகில் கிடந்த மரங்களும் முன்பே கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தண்டனை வழங்குக
இந்த கடத்தல் நாடகத்தை வனத்துறையினரும், ஆந்திரா போலீசாரும் இணைந்து நடத்தியுள்ளனர். ஒரு ஆந்திரா தொழிலாளி கூட கைது செய்யப்படவில்லை. 100 பேர் தப்பியோடினர் என்றால் அவர்கள் விட்டுச்சென்ற மரங்கள் எங்கே? கடத்தல் கும்பல் தலைவன் கெங்கா ரெட்டியை சுடாதது ஏன்?. 20 அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தண்டனை பெற்றுத்தரவேண்டும்.
ரூ.10 லட்சம் நிவாரணம்
உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும். அதேபோல சட்டவிரோத காவலில் உள்ள 400 தமிழர்களை மீட்பதற்கு காவல்துறை தலைவர் தலைமையில் குழு அமைத்து அவர்களை உயிருடன் மீட்க உத்தரவிட வேண்டும் என்றும் வேல்முருகன் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.