இனப்படுகொலையாளனை அனுமதிப்பதா?- திருப்பதியில் டிச. 9-ம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்
சென்னை: இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை திருப்பதிக்கு வர அனுமதித்திருப்பதைக் கண்டித்து திருப்பதியில் டிசம்பர் 9ம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கருப்புக் கொடி காட்டும் கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியி்ட்டுள்ள அறிக்கை:
தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் தொப்புள் கொடி உறவுகளை இனப்படுகொலை செய்த படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவை டிசம்பர் 9-ந் தேதி திருப்பதிக்கு வர இந்தியப் பேரரசு அனுமதித்திருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழினப் படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை ஏற்க முடியாது என்றும் அந்தக் குழுவை அனுமதிக்க முடியாது என்றும் படுகொலையாளன் ராஜபக்சே கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்.
இதனால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் இலங்கை இனப்படுகொலையின் அழியாத சாட்சியங்களாக இருக்கிற தமிழீழ உறவுகளிடம் ஐக்கிய நாடுகள் அவையத்தின் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகம் வலியுறுத்தி வருகிறது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் அவைய விசாரணைக் குழு இந்தியா வர அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசை ஒட்டுமொத்த தமிழ்நாடும் வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் வர அனுமதிப்பதும் டிசம்பர் 9-ந் தேதி திருப்பதியில் அந்த கொடுங்கோலனுக்கு செங்கம்பளம் விரிப்பதும் தமிழர் நெஞ்சங்களை கொந்தளிக்க வைக்கிறது.
இலங்கை அதிபர் தேர்தலில் தோற்றுவிடுவோம்...தாம் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு போர்க்குற்றவாளியாக நிறுத்தப்படுவோம் என்று வெளிப்படையாக அஞ்சி அலறும் வகையில் ஒட்டுமொத்த சொந்த சிங்களதேசமே ராஜபக்சேவுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டிருக்கிறது. அதுவும் ராஜபக்சேவின் சொந்த கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையினரோ இனப்படுகொலையாளன் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடுங்கோல் ஆட்சியை சகிக்க முடியாமல் கட்சியை விட்டு வெளியேறியிருக்கின்றனர்.
இலங்கை அதிபர் தேர்தலில் 35 அரசியல் கட்சிகளின் பொதுவேட்பாளராக நேற்று வரை ராஜபக்சேவின் அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேனாவை நிறுத்தும் அளவுக்கு தன் சொந்த இனமக்கள் மீது அடக்குமுறை ஏவிவிட்டிருக்கிறார் எனில் அப்பாவி ஈழத் தமிழர்களின் கதி என்ன என்பதை இந்தியப் பேரரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்..
உலக நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கிற இந்தியா அங்கமாக இருக்கிற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவைத்தான் இந்தியப் பேரரசு அனுமதிக்க வேண்டுமே தவிர இத்தகைய கொடுங்கோலனும் போர்க் குற்றவாளியுமான ராஜபக்சேவை ஒருபோதும் இந்தியாவுக்குள் வர அனுமதிக்கவே கூடாது.
தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி ராஜபக்சேவை திருப்பதிக்கு மட்டுமல்ல இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் அனுமதிக்கக் கூடாது. இனப்படுகொலையாளன் ராஜபக்சே வருவதை எதிர்த்தும் அனுமதித்த இந்தியப் பேரரசைக் கண்டித்தும் திருப்பதியில் டிசம்பர் 9-ந் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.