திமுகவுக்கு தாவிய தவெக ஒன்றிய செயலாளர்! “செலவு செய்ய சொல்லி டார்ச்சர் பண்றாங்க”.. பரபர குற்றச்சாட்டு
நாகப்பட்டினம்: தவெக ஒன்றிய செயலாளர், அக்கட்சியில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்துள்ளார். சிறுபான்மை சமுதாய நிர்வாகிகளுக்கு கட்சியில் மதிப்பில்லை எனவும், செலவு செய்யs சொல்லி தொல்லை செய்வதாகவும் கூறி தவெக ஒன்றிய செயலாளர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழகத்தில் மக்கள் விரும்பும் மாற்றத்தை கொண்டு வரப் போகிறேன் என்று முதல் அறிக்கையில் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக எனவும் அறிவித்தார்.

தொடர்ந்து, கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார் விஜய். தவெகவில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டன. மேலும், தலைமைக் கழக நிர்வாகிகளையும் நியமித்து கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார் விஜய்.
சட்டமன்றத் தேர்தலுக்காக தவெகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. பாஜக - அதிமுக கூட்டணி அமைந்த நிலையில் இந்தக் கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்ன பாஜக தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால், பாஜக மற்றும் திமுக தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்று தவெக அறிவித்துள்ளது.
வரும் டிசம்பர் மாதம் தான் கூட்டணி குறித்து தவெக முடிவு எடுக்க உள்ளது. இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் தவெக தற்போதே தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தவெகவில் இருந்து நிர்வாகிகள் விலகி வருவது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வந்த ஜெகபர்தீன் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று இணைந்தார். நாகையில் உள்ள திமுக அலுவலகத்திற்கு இன்று வருகை தந்த ஜெகபர்தீன் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் திமுகவில் இணைந்தார். அவரோடு தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த பகுதி பொறுப்பாளர்களும் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த இளைஞர்களுக்கு பொறுப்பு தருகிறோம் என ஆசை வார்த்தைகளை கூறி நலத்திட்டங்கள் வழங்குவதற்கு எங்களை சொந்தமாக செலவு செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த நிர்வாகிகளை புறக்கணிப்பதாகவும் கட்சியில் இருந்து விலகிய ஜெகபர்தீன் குற்றம்சாட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications