ஜெயலலிதா கவலைக்கிடம்: சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட 2 புதிய ஐ.ஜி.க்கள் நியமனம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இரண்டு புதிய ஐ.ஜி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நலம் தேறி வந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதால் நிலைமை மோசமானது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டது. ஜெயலலிதாவின் நிலைமை மிக மிக கவலைக்கிடமாக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் நிலைமை காரணமாக தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் சாரங்கன், ஜெயராமன் என 2 புதிய ஐ.ஜி.க்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவே இந்த நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.