கைவிரித்த சொந்தங்கள்.. தாயை அடக்கம் செய்ய கையேந்திய சிறுவர்கள்.. கலங்க வைக்கும் வீடியோ
திண்டுக்கல் அருகே தங்களின் தாயை அடக்கம் செய்ய 2 சிறுவர்கள் மருத்துவமனையில் இருந்த சக நோயாளிகளிடம் பிச்சையெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே தங்களின் தாயை அடக்கம் செய்ய 2 சிறுவர்கள் மருத்துவமனையில் இருந்த சக நோயாளிகளிடம் பிச்சையெடுத்த சம்பவம் கலங்க வைத்துள்ளது.
பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் மற்றும் கோவில்கள் என பிச்சையெடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெற்ற தாயின் உடலை அடக்கம் செய்ய இரண்டு சிறுவர்கள் பிச்சையெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் காளியப்பன். கூலி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு மோகன் (14), வேல்முருகன் (13)என்ற இரு மகன்களும் மகள் காளீஸ்வரி என்ற ஒரு மகளும் உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காளியப்பன் திடீரென இறந்து போனார்.
மார்பக புற்றுநோயால் பாதிப்பு
இதையடுத்து தனது 3 குழந்தைகளை கூலி வேலை செய்து காப்பாற்றிவந்தார் விஜயா. இந்நிலையில்தான் விஜயாவின் வாழ்வில் விதி விளையாடியது. ஆம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் விஜயா. இதனால் மனமுடைந்த அவர் தனது குழந்தைகளை எப்படி காப்பாற்ற போகிறோம் என கண்ணீர் வடித்தார்.
வேலைக்கு சென்ற சிறுவர்கள்
இதைத்தொடர்ந்து தனது மகள் காளீஸ்வரியை மட்டும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்து விட்டார் விஜயா. வசதியில்லாததால் சிறுவர்கள் 2 பேரையும் வேலைக்கு அனுப்பி விட்டார்.
படுத்த படுக்கையான விஜயா
கூலி வேலை செய்த சிறுவர்கள் குடும்பத்தையும் தாயையும் கவனித்துக்கொண்டனர். இதனிடையே விஜயாவுக்கு புற்று நோய் நாளுக்கு நாள் முற்றிப் போனது. இதனால் படுத்த படுக்கையானார் விஜயா.
கைவிரித்த உறவினர்கள்
தாயின் நிலைமையை கூறி உறவினர்ளிடம் உதவி கேட்டனர் சிறுவர்கள். ஆனால் அவர்கள் கைவிரித்துவிட்டதால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தங்களின் தாயை அனுமதித்தனர்.
உயிரிழந்த விஜயா
இந்நிலையில் விஜயா சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆடிப்போன சிறுவர்கள் கதறி அழுதனர். மருத்துவமனையில் இருந்த சக நோயாளிகள் உறவினர்களுக்கு தெரிவிக்குமாறு கூறினர்.
இதனால் அவர்களின் செல்போனை வாங்கி சிறுவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
பிச்சையெடுத்த சிறுவர்கள்
தகவல் சொல்லியும் உறவினர்கள் யாரும் உதவ முன்வரவில்லை. இதையடுத்து தாயை அடக்கம் செய்வதற்காக மருத்துவமனையில் இருந்த சக நோயாளிகளிடம் இரண்டு சிறுவர்களும் பிச்சையெடுத்தனர். இந்த காட்சியை பார்த்துவிட்டு மருத்துவமனை வளாகமே கண்ணீர் சிந்தியது.
எரியூட்ட ஏற்பாடு
இதனை அறிந்த மருத்துவர் மாலதி பிரகாஷ் சிறுவர்களுக்கு உதவி செய்தார். மேலும் திண்டுக்கல் மின்மயானத்தில் விஜயாவின் உடலை எரியூட்டவும் ஏற்பாடு செய்தார்.
அதிர்ச்சியும், வேதனையும்
ஆதரவின்றி தவிக்கும் இந்த குழந்தைகளை மாவட்ட நிர்வாகம் கவனித்து பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். உறவினர்கள் கைவிரித்த நிலையில் தாயின் உடலை அடக்கம் செய்ய சிறுவர்கள் பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.