பொன். ராதாவுடன் கூடங்குளம் உதயக்குமார் திடீர் சந்திப்பு!
நாகர்கோவில்: நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டில் அவரை கூடங்குளம் போராட்டக் குழுத் தலைவரும், எளிய மக்கள் கட்சி அதாவது ஆம் ஆத்மி சார்பில் லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டவருமான உதயகுமார் இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.
பூவுலகின் நண்பர் சுந்தர்ராஜன், இடிந்தகரை பங்கு தந்தை ஜெயக்குமார், இடிந்தகரை, கூடங்குளம், சின்னமுட்டம், பெருமணல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மீனவ கிராம மக்களும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர்.
அப்போது பொன்.ராதாகிருஷ்ணனிடம் உதயகுமார் கோரிக்கை மனு ஒன்று அளித்தார். அதில்,கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும், மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். மேலும் மீனவ மக்கள் பொன்.ராதாகிருஷ்ணனிடம் தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை தெரிவித்தனர்.
இதைக் கேட்டறிந்த பொன்.ராதாகிருஷ்ணன், கூடங்குளம் அணு உலையை மூடுவது என்பது கடினமான காரியமாகும். மக்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும், பாஜக அரசு உத்தரவாதம் அளிக்கும் என்று கூறினார்.
இதை தொடர்ந்து உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், மகாராஷ்டிராவில் ஜெயத்தாபூர் பகுதியில் அணு உலையை மூட வேண்டுமென்று அந்த பகுதி மக்கள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சவுதோகரை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் மூட வேண்டுமென்று மத்திய அமைச்ச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். அணு உலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவர்களிடம் நாங்கள் விளக்கினோம்.
தற்போது கூடங்குளத்தில் 3, 4-வது அணு உலை தொடங்கும் நிலையில் உள்ளது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். கூடங்குளம், இடிந்தகரை, சின்னமுட்டம், பெருமணல் பகுதி பெண்கள் கூடங்குளம் அணு உலை பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்திக்க வேண்டுமென்று ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிரதமரை சந்திக்க நடவடிக்கை எடுப்பதாக பொன். ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். 5 பேர் மட்டுமே பிரதமரை சந்திக்க செல்ல முடியும் என்று கூறியுள்ளார். இதனால் எங்கள் மனதில் புது உற்சாகம் வந்துள்ளது என்றார் உதயக்குமார்.