உடுமலை ஆணவக்கொலை: பல்லடம் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்த கவுசல்யா
திருப்பூர்: உடுமலைபேட்டையில் ஜாதி ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி , இரண்டரை மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
கலப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியர் சங்கர், கவுசல்யாவை கடந்த 13ம் தேதி, உடுமலை பேருந்து நிலையப் பகுதியில் கொடூரமாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சங்கர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தலையில் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த கவுசல்யா, கோவை அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் முன்பு ஆஜராகி கவுசல்யா ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம், உடுமலை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் கவுசல்யாவை அழைத்து வந்தனர்.
கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்துக்குள் மதியம் 1.30 மணிக்கு ரகசிய வாக்குமூலம் அளிக்கத் தொடங்கினார். நீதிமன்ற வளாகத்தில் இருந்தோர் அனைவரும் வெளியேற்றப்பட் டனர். ரகசிய வாக்குமூலம், மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.
இரண்டரை மணி நேரம், சங்கர் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றது. இதில், கவுசல்யாவுடன் கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியங்களும், நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், பல்லடம் நீதிமன்றத்தில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கவுசல்யா அழைத்து செல்லப்பட்டார்.
சங்கர் கொலை வழக்கில் கைதானவர்களை அடையாளம் காட்டுவதற்காக கவுசல்யாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் இன்று கோவை சிறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.
அப்போது கவுசல்யா தனது கணவர் சங்கரை கொலை செய்தவர்களை அடையாளம் காட்டினார். அடையாள அணிவகுப்பையொட்டி சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதன்பின்னர் மீண்டும் கவுசல்யாவை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் கவுசல்யா உடல்நிலை தேறியிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எட்வின் ஜோ, "கொலை சம்பவத்தின்போது இவரது தலையில் ஏற்பட்ட பலத்த வெட்டுக் காயத்துக்கு 36 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அது இன்னும் பிரிக்கப்படவில்லை. தொடர்ந்து அவருக்கு தலை நரம்பியல் சிகிச்சை தேவைப்படுகிறது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications