பீசா, சிப்ஸ், பர்கர் இனி இல்லை.. பல்கலை, கல்லூரிகளில் ஸ்நாக்ஸ்கள் விற்க தடை!
பல்கலை, கல்லூரிகளில் நொறுக்கு தீனிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: காலேஜ்-க்கு செல்போன் கொண்டு போகக்கூடாது என்று உத்தரவு வந்ததும் கிறுகிறுத்துபோய் விட்டார்கள் மாணவர்கள். இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்தே மீள முடியவில்லை. அதுக்குள்ளே இன்னொரு இடி.. இன்னொரு ஷாக்.. இன்னொரு ஆப்பு!
கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் நொறுக்கு தீனிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை இப்போது போட்டிருப்பது மத்திய மனித வளத்துறை அமைச்சகம்தான். இந்த ஜங்க் புட் எனப்படும் நொறுக்குத் தீனியை மாணவ, மாணவிகள் சாப்பிட்டால் அவர்களின் ஆரோக்கியம் சீக்கிரமாகவே கெட்டு விடுவதாகவும், அதனால் அவர்களின் உடம்பும் வெயிட் போட்டு விடுவதாக தெரிவித்துள்ளது.
ஸ்நாக்ஸ்-க்கு தடா
இப்படி உடல் எடையை கூட்டக்கூடிய, உடல்நலத்தை கெடுக்கக்கூடிய, பல்வேறு நோய்களுக்கு வழிவிடக்கூடிய இந்த ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் இந்த நொறுக்குத் தீனி உணவு மற்றும் அதிகம் இனிப்பு கலந்த கூல்டிரிங்க்ஸ் விற்கவும் பல்கலைக்கழக மானிய குழு தடை கோரியுள்ளது. இதற்காக எல்லா கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கையையும் அனுப்பி வைத்துள்ளது. சுற்றறிக்கையில் இந்த விதியை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
சுண்டியிழுக்கும் பாக்கெட்டுகள்
வீட்டில் பெரியவர்கள் இந்த ஜங்க் புட் சாப்பிட வேண்டாம் என எவ்வளவோ சொல்லி பார்த்தும் சில பிள்ளைகள் அதனை காதில் கூட வாங்குவது கிடையாது. அந்த நொறுக்கு தீனியில் உப்பு, கொழுப்பு சத்துதான் அதிகம் உள்ளது. போதாக்குறைக்கு மாணவர்களை சுண்டியிழுக்கும் வகையில் கலர் கலர் பாக்கெட்கள் கடைகளில் தொங்கவிட்டு காண்பிப்பது. இதே யுக்திதான் கூல்டிரிங்க்ஸ்-ல் கடைப்பிடிக்கப்படுகிறது.
மாணவர்கள் உணர வேண்டும்
இனி, பீசா, பர்கர், சிப்ஸ், கேக்குகள், குக்கீஸ், கூல்டிரிங்க்ஸ் எதுவுமே காலேஜ், பல்கலை காம்பவுண்டுக்குள் வராது என திடமாக பெற்றோர்கள் நம்பலாம். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கவும், சின்ன வயதிலேயே நோய்களுக்குள் சிக்கி விட கூடாது என்பதற்காகவும்தான் இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது என்பதை மாணவர்கள் உளமார உணர வேண்டும்.
ஆரோக்கியம் சிறக்கட்டும்!
ஆசைப்பட்டதை சாப்பிட முடியாமல் ஆப்பு வைத்துவிட்டார்களே என்று சில மாணவர்கள் தவறாக நினைத்துவிட கூடாது. அதேசமயம், தடை செய்யப்பட்ட எல்லாவற்றையும் வெளியில் வாங்கி சாப்பிட்டு கொள்ளலாம் என்று நினைத்தால், அதுதான் மாணவர்கள் தங்களுக்கு தாங்களே வைத்துக் கொள்ளும் ஆப்பு! புரியவில்லை... சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வது! இனியாவது மாணவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கட்டும்!