மீண்டும் ஒரு மெளனத் திருமணம்.. சீரியஸாக நடந்த சிரிப்புத் திலகம் வடிவேலு மகன் கல்யாணம்!
மதுரை: நகைச்சுவைத் திலகம், வைகைப் புயல் வடிவேலு வீட்டில் குறுகிய காலத்திற்குள் நடந்த 2வது விசேஷமும் அமைதியாக, ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடந்தேறியுள்ளது. முதலில் அவரது மகள் திருமணததை மிகவும் அமைதியான முறையில், மிக எளிமையாக மதுரையில் வைத்து நடத்தினார் வடிவேலு. இப்போது தனது மகன் திருமணத்தையும் அவர் அமைதியான முறையில் அதை நடத்தி முடித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகம் கண்டு அபாரமான நகைச்சுவை நடிகர்களில் வடிவேலுவுக்கும் முக்கிய இடம் உண்டு. தனது அசகாய திறமை, பன்முக திறமை மூலம் பலவிதமான கதாபாத்திரங்களில் கலக்கியவர் வடிவேலு.

காமெடியனாக அறிமுகமானாலும் கூட குணச்சித்திரத்திலும் வெளுத்துக் கட்டியவர், முத்திரை பதித்தவர் வடிவேலு. கதையின் நாயகனாகவும் இம்சை அரசன் படத்தில் பிரமிக்க வைத்தவர்.
ஆனால் காலத்தின் கோலமாக கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு தனது வாயால் கெட்டவர் வடிவேலு. விஜயகாந்த்தை கடுமையாக திட்டி வசை பாடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். திமுக மேடைகளில், வாகனங்களில் ஏறி தீவிரப் பிரசாரம் செய்தார். ஆனால் அவரது நேரம், விஜயகாந்த் இடம் பெற்றிருந்த அதிமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதிமுக ஆட்சியைப் பிடித்தது. திமுக ஆட்சியை இழந்தது, படு தோல்வியைச் சந்தித்தது.
அதன் பின்னர் வடிவேலு வீட்டோடு முடங்கும் நிலை ஏற்பட்டது. அவரை வைத்துப் படம் எடுக்க பலரும் தயங்கினர். இதனால் படம் இல்லாமல் அமைதியாக வீட்டோடு இருந்து விட்டார் வடிவேலு. அவரே கூட நடிக்க விரும்பாமல் ஓய்வை விரும்பினார்.
இந்த நிலையில்தான் கடந்த 2013ம் ஆண்டு வடிவேலுவின் மகள் கன்னிகாபரமேஸ்வரிக்கு மதுரையில் திருமணம் நடந்தது. மிக மிக அமைதியாக, ஆர்ப்பாட்டமே இல்லாமல், வடிவேலு வீட்டு கல்யாணம் போலவே இல்லாமல் கிட்டத்தட்ட ரகசியமாக நடத்தினார் தனது மகள் திருமணத்தை வடிவேலு. காரணம், அப்போது இருந்த அரசியல் நெருக்கடி. திரையுலகத்திலும் சரி, அரசியல் உலகத்திலும் சரி யாரையும் கூப்பிடவில்லை. உற்றார், உறவினர்களோடு நிறுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் நேற்று வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனின் திருமணம் மதுரையில் நடந்துள்ளது. இதுவும் அமைதியாக சத்தம் இல்லாமல் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. இதையும் கூட சிம்பிளாக முடித்து விட்டார் வடிவேலு. யாருக்கும் அழைப்பு இல்லை.
மணப்பெண் பெயர் புவனேஸ்வரி. இவர் வடிவேலுவின் மனைவி வழி சொந்தம். ஒரு பைசா கூட வரதட்சணையாக வாங்காமல் அனைத்துச் செலவுகளையும் வடிவேலுவே பார்த்துக் கொண்டாராம்.
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த திருமணத்திற்கு அழைப்பிதழ் வைத்திருந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வேறு யாருக்கும் அனுமதி இல்லை. பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி இல்லை.
திரையுலகிலிருந்து வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகனாக நடித்த தெனாலிராமன் பட இயக்குநர் யுவராஜ், இயக்குநர் அமீரின் உறவினரான ஆதம்பாவா ஆகியோர் மட்டும் கலந்து கொண்டனர்.
உலகத் தமிழர்களை வயிறு குலங்க சிரிக்க வைத்த நடிகர் மனதார சந்தோஷமாக திருமணத்தை நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாரே.. வேதனைதான்..!












Click it and Unblock the Notifications