தேர்தல் அமைதியாக நடைபெற மதுக்கடைகளை மூடுக: வைகோ
தேனி: லோக்சபா தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் எனில் ஏப்ரல் 10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
தேனி லோக்சபா தொகுதி மதிமுக வேட்பாளர் அழகு சுந்தரத்திற்கு ஆதரவாக இலட்சுமிபுரம் பகுதியில் வைகோ வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதற்கு ஏதுவாக, வாக்குப்பதிவை ஒட்டி மூன்று நாள்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பணம் வாரி இறைப்பு
ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் பூத் செலவுக்கு என்று முதல் கட்டமாகப் பணத்தை வாரி இறைத்து இருக்கின்றார்கள். எனவே, அவர்களுடைய கைகளில் மகாத்மா காந்தி சிரித்துக் கொண்டு இருக்கின்றார். டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகின்றது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை
பெண்கள் நிம்மதியாக நடமாட முடியவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் அனைத் திற்கும் மூல காரணமே மதுக்கடைகள்தான்.
மதுவிலக்கு நடைபயணம்
எங்களுடைய கொள்கை தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நிறைவேற்ற வேண்டும். அதற்காக, தமிழகம் முழுவதும் 1500 கிலோமீட்டர்கள் நடைபயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து உள்ளேன்.
மதுக்கடைகளை மூடுக
நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும்; வாக்காளர்கள் சுயமாகச் சிந்தித்து வாக்கு அளிக்க வேண்டும் என்றால், குறைந்தது இரு வார காலம், வருகின்ற 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி முடிய மதுக்கடைகளை மூடுவதற்குத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.