தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை.. வைகோ ஆவேசம்
தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை நிலவுவதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை நிலவுவதாகவும், தமிழக நலன் காப்போர் மீது பாசிச அடக்குமுறை ஏவப்படுகிறது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், சுற்றுச்சூழல் நாசத்தைத் தடுக்கவும், விவசாயிகள் உரிமைகளைப் பாதுகாக்கவும் போராடுகின்றவர்களை, தேசப் பாதுகாப்புச் சட்டம், தேசத்துரோகக் குற்றச்சாட்டு, குண்டர் சட்டம் ஆகிய கொடிய அடக்குமுறைச் சட்டங்களில் வழக்குப்பதிவு செய்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில், "அறவழிப் போராட்டக்காரர்களை சிறையில் அடைத்து துன்புறுத்துவது, தமிழக அரசின் அன்றாட நடவடிக்கை ஆகி விட்டது சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்தால் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு ஆறுதல் கூற சென்றவர்களையும் போலீசார் கைது செய்து துன்புறுத்துகின்றனர் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 19 பேர் சிறையில் பெரும் துன்புறுத்தலை அனுபவித்து வருகின்றனர் என்றும் அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது காவல்துறை பொய் வழக்குகளை போடுகிறது என்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் வசீகரன், உள்ளிட்டோர் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.
வைகோ தமிழக அரசின் போக்கு குறித்து குறிப்பிடுகையில், அதிகார மமதையில் தமிழக அரசு போலீசாரை வைத்து அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அமல்படுத்தியுள்ளதாகவும், அடக்குமுறையின் மூலம் போராட்டங்களை நசுக்க நினைத்தால், அது ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், மீறினால் வீறுகொண்டு எழும் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.