நழுவிய மதிமுக: கனவாகிறதா திமுகவின் மெகா கூட்டணி முயற்சி
சென்னை: கல்யாண வீட்டில் கை நனைத்து நலம் விசாரித்ததற்கே 2016 சட்டமன்ற தேர்தலுக்கு மெகா கூட்டணி உருவாகப் போகிறது என்று செய்திகள் வெளியாகின.
இந்த செய்திகள் அடிபட்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த வாரம் தனியார் டிவி ஒன்றில் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின், வைகோ உடன் என்ற பிரச்சினையும் தனக்கு இல்லை என்று பேட்டியளித்தார்.
இதுவே கூட்டணிக்கு அவர் விடுத்த சமிக்ஞைக்கு தோதாக பாமகவின் ராமதாஸ் வீட்டுக் கல்யாணமும் வரவே இருவரும் சந்தித்து பேச வாய்ப்பு அமைந்தது. திருமண விழாவில் ஸ்டாலினே, வைகோவைத் தேடிப் போய் பேசினார். தொடர்ந்து ஒரே விமானத்தில் இருவரும் இணைந்து மதுரைக்குப் போய் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றனர். இது கூட்டணிக்கான ராஜதந்திர முயற்சியாக அமைந்தது.
கருணாநிதி வரவேற்பு
வைகோ, ஸ்டாலின் த சந்திப்புக்குப் பின், ‘திமுகவுடன் மதிமுக கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி' என்று கருணாநிதியும் ஸ்டாலினும் தெரிவித்தனர். இதையடுத்து, திமுக - மதிமுக இடையே கூட்டணி என்பதுபோல தகவல்கள் வெளிவரத் தொடங்கின.
முற்றுப்புள்ளி வைத்த வைகோ
எந்த திருமண விழாவில் கூட்டணி அமைந்ததாக பேசப்பட்டதோ, அதேபோன்றதொரு திருமண விழாவில் கூட்டணிப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியிருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
முதல் கோணல்
இந்நிலையில், 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என திட்டமிட்ட திமுக, அதற்கான பணிகளை தொடங்கியது. ஆனால், இப்போதும் முதல் முயற்சியே கோணலாகியுள்ளது.
தடுத்த தமிழருவி
இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து வாசன் வெளியேறவேண்டும் என்று நீண்டநாட்களாகவே அழைப்பு விடுத்து வரும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், திமுகவுடன் வைகோ கூட்டணி சேரக்கூடாது என்று பகிரங்கமாகவே பேட்டியளித்தார்.
நட்புக்கு மரியாதை
தமிழருவி மணியனுன் நீண்டகால நட்பில் இருக்கும் வைகோ, திமுக உடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்க காரணமானது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
திட்ட வட்ட அறிவிப்பு
ஈரோடு கணேசமூர்த்தி இல்லத் திருமண விழாவில் கூட்டணி பற்றிய வதந்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்ட வைகோ, திமுகவுடன் கைகோர்க்கும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். வைகோ இவ்வாறு பேசியது, திமுகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மறக்க முடியுமா?
ஸ்டாலினுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டில்தான், திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். தற்போது திமுக தலைமையை வழி நடத்தத் தயாராக இருக்கும் ஸ்டாலினின் வழிகாட்டுதலை ஏற்று, வைகோ கூட்டணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்க முடியாது. கடந்த 2001, 2006 தேர்தல்களிலும் திமுகவை நம்ப வைத்து,கூட்டணி மாறியது மதிமுக. வைகோவுடன் கூட்டணி வைப்பது திமுக அணியில் முரண்பாடுகளையேஅதிகரிக்கும் என்பது திமுகவினர் கருத்து.
தீவிரமாகும் 2ஜி வழக்கு
2ஜி வழக்கில் திமுகவைச் சேர்ந்தவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. உள்கட்சிப் பிரச்சினை, கட்சியில் அடுத்த தலைவர் யார் என்ற போட்டிகளும் அங்கு நிலவுகின்றன.
சறுக்கலை சந்திக்குமா?
எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழருக்கு எதிரான இறுதிப் போரின்போது, இலங்கைக்கு உதவிய காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக இருந்ததை எப்போதும் மறக்க முடியாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், திமுக பலவீனமாகவே உள்ளது. எனவே, தற்போது திமுகவுடன் கூட்டணி சேர்வது மதிமுகவுக்குதான் சறுக்கலை ஏற்படுத்தும் என்று மதிமுகவினர் கருதுகின்றனர்.
வலிய போனால்
இது தவிர முன்கூட்டியே யாருடன் கூட்டணி என்று அறிவித்து அவர்களுடன் இணக்கமாக செயல்பட்டால் கடைசியில் அவர்கள் கொடுக்கும் சீட்டை வாங்கிக் கொண்டு போகவேண்டியதுதான். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் மதிமுக தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது முன்கூட்டியே அதிமுக உடன் இணக்கமானதனால்தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையும் இதே போன்று ஒரு நிலை பாஜகவிற்கு ஏற்பட்டது. எனவே மீண்டும் ஒரு இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொள்ள வைகோ விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
ராஜதந்திரியா ஸ்டாலின்
அதே சமயம் கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் திமுகவின் ராஜதந்திரம் பலவீனமாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சுமார் 9 ஆண்டுகள் திமுகவுடன், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூட்டணியில் இருந்தது. 2014நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு கூட்டணியை முறித்துக் கொண்டது திமுக. பின்னர், புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
தேமுதிகவிற்கு அழைப்பு
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேமுதிகவுக்கு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார் கருணாநிதி. விஜயகாந்தை விமர்சித்த தன் மகன் மு.க.அழகிரியையே கட்சியில் இருந்து நீக்கினார். ஆனால், கடைசி வரை சஸ்பென்ஸை நீட்டித்த தேமுதிக, கடைசியில் பாஜக பக்கம் போய்விட்டது.
வலையில் விழாத கட்சிகள்
இதேபோல்தான் பாமக, மதிமுகவுக்கு விரித்த வலையும் பலனளிக்கவில்லை. தாங்கள் போட்ட கூட்டணி கணக்குகள் தப்பாகிப் போனது.
கைவிட்ட காங்கிரஸ்
கடைசியில் வேறு வழியின்றி காங்கிரஸாவது எப்படியும் கூட்டணிக்கு வரும் என்று திமுக தலைமை எதிர்பார்த்தது. ஆனால், காங்கிரஸும் தனித்துப் போட்டியிட்டது. வேறு வழியின்றி சிறிய கட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்த திமுக, அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.
கருணாநிதியின் பிடிக்குள்
கடந்த சில ஆண்டுகளாக திமுகவின் தேர்தல் கணக்குகள் சரியான வெற்றியைத் தரவில்லை. கூட்டணி சேர்வதிலும், தேர்தலிலும் திமுகவின் ராஜதந்திரம் வலுவிழந்து விட்டதாகவே, சமீபத்திய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. ‘கட்சியை கருணாநிதி மீண்டும் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அவரது ராஜதந்திரம்தான் வெற்றிக்கு வழிவகுக்கும்' என்ற கோரிக்கை திமுக தொண்டர்களிடம் எழுந்துள்ளது.
நழுவும் திருமாவளவன்
ஸ்டாலின் அமைத்து வரும் கூட்டணி பேச்சுவார்த்தைகளைப் பார்த்து வரும் திருமாவளவன், பாமகவை உள்ளே வந்தால், உடனடியாக திமுகவை விட்டு வெளியேறும் நிலையில்தான் இருக்கிறது. ஏனெனில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமகவும், திருமாவளவனும் ஒரே அணியில் இருந்து பட்ட பாட்டினை அக்கட்சி தொண்டர்களே நன்கு அறிவார்கள்.
அதிமுகவிற்கு எதிராக திரளுமா?
அதிமுகவிற்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கவேண்டும் என்ற திமுகவின் கனவுத் திட்டம் நனவாகுமா? மிகப்பெரிய கட்சிகள் திமுக உடன் இணையுமா? அல்லது ஊழலுக்கு எதிராக புதிய அணி உருவாகுமா? என்பதே இப்போதயை கேள்வி. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தாலும், தமிழகத்தில் சில வாரங்களில் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் களை கட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் அதிமுக என்ற கட்சிக்கு எதிராக மிகப்பெரிய வியூகத்தை வகுக்க அனைத்து கட்சிகளுமே தயாராகி வருகின்றன. ஆனால் எதிர்கட்சிகள் அனைவருமே முதல்வர் கனவில் இருப்பதுதான் மிகப்பெரிய பலவீனமாகும்.