ஸ்டெர்லைட்டை தொடர்ந்து களமிறக்கப்படும் கேரள முதலாளிகளின் பணம்... வைகோ தப்புவாரா?
தேனி: ஸ்டெர்லைட் ஆலை முதலாளிகளுக்கு தலைவலியாக இருக்கும் வைகோ முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரள முதலாளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தி வருவதால், விருதுநகர் தொகுதியில் வைகோவை தோல்வியடையச் செய்ய கோடிக்கணக்கில் பணம் கொட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வைகோ உடன் மதிமுக வேட்பாளர்கள் தேனி அழகு சுந்தரம், தூத்துக்குடி ஜோயல், தென்காசி சதன் திருமலைக்குமார் ஆகியோரையும் தோல்வியுறச் செய்ய வைக்க அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.ஆனாலும் அசராத வைகோ, தனது தொகுதியில் பிரசாரத்தை முடித்து விட்டு பிற வேட்பாளர்களின் தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
தேனி லோக்சபா தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் அழகு சுந்தரத்தை ஆதரித்து ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சமயநல்லூரில் தொடங்கி கொண்டையம் பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, மேட்டுப்பட்டி, கச்சைகட்டி, குட்லாடம்பட்டி, வாடிப்பட்டி, கருப்பட்டி, சோழவந்தான், தென்கரை ஆகிய பகுதிகளில் நேற்று இரவு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
திறந்த வேனில் வேட்பாளர் அழகு சுந்தரத்துக்கு பம்பரம் சின்னத்தில் வாக்கு சேகரித்த வைகோ பேசியதாவது:
கட்சிக்கொடியை கழற்றுவதா?
வாடிப்பட்டியில் வருவாய்துறையினரும் காவல்துறை அதிகாரியும் கட்சி கொடிகளை கழற்றினார்களாம். மதுரையில் முதல்வர் கலந்துகொண்ட கூட்டத்தில் டோல்கேட்டை மறித்துகொடிகளும் தோரணங்களும் கட்டினர், பந்தல்போட்டனர். அப்போது எல்லாம் என்ன செய்தார்கள்.
காக்கிச் சட்டைக்கு என்ன அக்கறை ?
இங்கு கொடிகளை அகற்றிட அவர்களுக்கு என்ன அக்கறை உள்ளது. கூட்டங்களில் எல்லாம் கொடிகட்டுவார்கள் கட்சிகாரர்களே கழற்றி சென்றுவிடுவார்கள். இவர்கள் கொடியை கழற்ற என்ன சட்டம் உள்ளது. இந்த பிரச்சினைக்கு மக்கள் நீதிமன்றம் முன் முறையிட வந்துள்ளேன். நீதிகேட்க வந்துள்ளேன்.
அதிமுகவிற்கு வேலை
காவல்துறைக்கு அரசாங்கம் சம்பளம் தருகிறதா? அல்லது அதிமுக சம்பளம் தருகிறதா? அப்படி விசுவாசம் இருந்தால் காக்கிச்சட்டையை கழற்றி வைத்துவிட்டு அதிமுகவிற்கு வேலை செய்யப் போகலாமே என்றார் ஆவேசமாக.
முல்லைப்பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்டது. அதற்காக 10 வருடங்களாக போராடி வருகிறேன். நடைபயணத்தில் கால்கள் கொப்பளிக்க வெயிலில் மக்களை திரட்டிகொண்டு நடந்தேன். அப்போது எல்லாம் ஓட்டு கேட்டு வரவில்லை.
அணையை உடைக்கப் போகிறார்கள்
முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரளா அரசு திட்டத்தை இன்னும் கைவிட்டுவிட வில்லை. அணையை உடைப்பதற்கு வைத்துள்ள வெடிமருந்துகளை தயாராக வைத்துள்ளது. அதற்கு ஒதுக்கபட்ட 50 கோடி பணம் அப்படியே உள்ளது.
மோடி ஆட்சியில் நீதி
முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்கு நரேந்திரமோடி ஆட்சியில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். நரேந்திரமோடி பிரதமராவார் அதை யாராலும் தடுக்கமுடியாது. ஆனால் இங்கேயிருந்து தேசிய ஜனநாயக கூட்டணியிலே அதிகம் பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று சென்றால்தான் தமிழகத்திற்கு நீதிகிடைக்கும். அப்போதுதான் அன்டை மாநிலங்கள் நமக்கு வஞ்சகம் செய்யும் போது தடுக்க முடியும் என்றார் வைகோ.
கேரள முதலாளிகள் பணம்
இதனிடையே மதிமுகவில் வைகோ, தேனி அழகு சுந்தரம், தூத்துக்குடி ஜோயல், தென்காசி சதன் திருமலைக்குமார் ஆகியோரை தோற்கடிக்க கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பணத்தை வாரி இறைப்பதாக புகார் எழுந்துள்ளது.
வைகோ தான் எதிரி
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்காக குரல் கொடுத்துவரும் வைகோ, கேரள அரசியல்வாதிகளும், குமுளி மற்றும் தேக்கடி பகுதிகளில் ரிசாட்ஸ்கள் நடத்தி வரும் ஹோட்டல் முதலாளிகளும் எதிரிகளாகவே பாவித்து வருகின்றனராம். எனவே வைகோவை நாடாளுமன்றம் செல்ல விடக்கூடாது என்று சபதமே எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சிகிச்சைக்கு போக முடியவில்லை
இந்த தகவல் வைகோவிற்கு தெரியவந்துள்ளது. அதனால்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடலூர் பகுதிகளில் பிரசாரம் செய்யப் போன வைகோ, இயற்கை மருத்துவ சிகிச்சைக்காக கேரளா செல்வது வழக்கம், முல்லைப் பெரியாறு பிரச்சினைக்குப் பின்னர், வைகோ இங்கே வந்தால் உயிர் இருக்காது வைத்திய சாலையும் இருக்காது என்று மிரட்டியுள்ளனர் கேரள அரசியல்வாதிகள். இதனால் சிகிச்சைக்குக் கூட செல்ல முடியவில்லை என்று கூறினார்.
செத்தால் சந்தோசப்படுவேன்
அதோடு மட்டுமல்லாது, அணைப் பிரச்சினையில் என் உயிர் போனாலும் சந்தோசப்படுவேன் என்று கண்ணீர் மல்க பேசி தேனி தேர்தல் களத்தை சூடாக்கியிருக்கிறார் வைகோ. அப்போது கேரள உளவுத்துறையினர் வைகோவின் பிரசாரத்தை கண்காணித்து குறிப்பு எடுத்துச் சென்றதை அடுத்து மதிமுகவினர் புகார் கூறுவது உண்மை என்றே கருதப்படுகிறது.
சோதனைகளை சாதனையாக்குவாரா?
கடந்த 2009 லோக்சபா தேர்தலில் தொகுதிக்கு அறிமுகமே இல்லாத காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரிடம் 15,764 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் வைகோ. இம்முறை 5 முனை போட்டி ஒருபுறம், மறுபுறம் ஸ்டெர்லைட், ராஜபக்சே, கேரளமுதலாளிகளின் பணம் வேறு வைகோ தோல்வியடையச் செய்ய மும்முரமாக களம் இறக்கப்படுகிறது. சோதனைகளை சாதனைகளாக்குவாரா வைகோ?