காயம் ஏற்பட்டால் அதுக்காக ஜல்லிக்கட்டை தடை செய்வதா?: வைகோ
சென்னை: காயம் ஏற்படுவதைக் காரணம் காட்டி ஜல்லிக்கட்டை தடை செய்வது அறிவீனம் என்று வைகோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாட்டுக் கலையான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு நானே முன்னின்று பாடுபடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்
இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
தமிழர்களின் வீரத்தை உலகிற்குப் பறைசாற்றும் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு ஆகும். பல்வேறு காரணங்களைக் கூறி ஜல்லிக்கட்டுக்குத் தடை ஏற்படுத்திடும் முயற்சிகள் நடைபெற்றபோதெல்லாம் அதை வன்மையாகக் கண்டித்தும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறேன்.
வளர்ந்து செழித்த ஐரோப்பா கண்டத்தின் ஸ்பெயின் நாட்டில் இன்றும் மாடுபிடி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பலரும் காயம் அடைகின்றனர்; உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. ஆனாலும் அந்த வீர விளையாட்டு தொடர்கிறது. சங்க இலக்கியத்தில் ஏறு தழுவுதல் எனும் வீரக் கலை வாலிபர்களின் திருவிழா கலையாகவே திகழ்ந்தது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளைக் காண உலக நாட்டு யாத்திரிகர்கள் வந்து குவிகின்றனர். இதில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டுக் காளைகளை மக்கள் கண்போல் பாதுகாத்து வருகின்றனர். போட்டியில் பங்கேற்கும் காளை மாடுகளுக்கு எந்த உடல் உபாதைகளும் ஏற்படுவதில்லை.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்போருக்கு காயம் ஏற்படுவதைக் காரணம் காட்டி தடை செய்வது அறிவீனம் ஆகும். நெடுஞ்சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான விபத்துகளில் பலர் உயிர் இழக்கின்றனர்; காயம் அடைகின்றனர். இதற்காக சாலைகளில் வாகனங்களே ஓட்டக் கூடாது என்று அரசு சட்டம் கொண்டுவர முடியுமா? எனவே, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு எந்தத் தடையும் விதிக்கக் கூடாது.
மதுரை மாவட்டத்தில், கரடிக்கல் உள்ளிட்ட பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படாததால், மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர்.
தமிழர்களின் பண்பாட்டுக் கலையான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு நானே முன்னின்று பாடுபடுவேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.