அரசியலை விட்டு ஒதுங்கிடுங்க வைகோ… சொல்கிறார் நாஞ்சில் சம்பத்
அருப்புக்கோட்டை: 9 பிரதமர்களை கேள்வி கேட்க வைகோவை விஜயகாந்த் அறிமுகம் செய்து வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பேசாமல் வைகோ அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
அருப்புக்கோட்டை காந்திநகர், பாலையம்பட்டி, சிவன்கோவில், பாவடித் தோப்பு ஆகிய இடங்களில் விருதுநகர் லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து நாஞ்சில் சம்பத் இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 17 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழ்நாட்டிற்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை. கனிமொழியும் ராஜாவும் 2ஜி ஸ்பெக்ட்ரம்மில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஊழல் செய்ததுதான் சாதனை.

எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லை
கலைஞர் கை நீட்டும் நபர்தான் பிரதமர் என்று ஸ்டாலின் கூறுகிறார். எதிர்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியாத தி.மு.க. எப்படி பிரதமரை தேர்ந்தெடுக்க முடியும். உங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார் என உங்களால் கூற முடியவில்லை. அப்படி இருக்க பிரதமரை எப்படி தேர்வு செய்வார்கள்? .

இந்திய பொருளாதாரம்
தற்போது இந்தியாவின் பொருளாதாரம் படு பாதாளத்திற்குச் சென்று விட்டது. இதற்கு காரணம் மத்திய அரசில் அங்கம் வகித்த நிதி அமைச்சர் சிதம்பரமே. கேரளாவில் மீனவர்களை இத்தாலி கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். உடனே கேரள அரசு இத்தாலி கடற் படையினரை சிறையில் அடைத்தது.

இலங்கைத் தமிழர்கள்
ஆனால் இலங்கையில் சிங்கள ராணுவம் 1 லட்சத்து 70 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்தது. அதற்க்கு மத்திய அரசு மற்றும் தி.மு.க.வினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிங்கள ராணுவத்தினர் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் எங்கும் ராணுவப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தடை போட்டார். சிங்கள விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் விளையாடவும் தடை விதித்தார்.

ஒதுங்கிடுங்க வைகோ
நாடாளுமன்றத்தில் 9 பிரதமர்களை தட்டிக்கேட்ட வைகோவை இன்று விஜயகாந்த் அறிமுகம் செய்து வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ம.தி.மு.கழகம் சவக்குழியை நோக்கி சென்று விட்டது. எனவே வைகோ அரசியலை விட்டே ஒதுங்க வேண்டும் என்றார் நாஞ்சில் சம்பத்.












Click it and Unblock the Notifications