வி.ஏ.ஓ தேர்வில் கேள்விகள் கடினம் – தேர்வு எழுதியோர் புலம்பல்
நெல்லை: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற வி.ஏ.ஓ தேர்வில் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததால் தேர்வர்கள் திணறி போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2342 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நேற்று நடைபெற்றது. சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர். தேர்வு எழுதிய பலருமே வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக புலம்பினர்.
கணிதம் தொடர்பான கேள்விகளுக்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டதாக தெரிவித்தனர். இதனால் பிற கேள்விகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியவில்லை. வேதியியல், சமூக அறிவியல் வினாக்களும் சற்று கடினமாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பொது அறிவு கேள்விகள் பராவாயில்லை. தமிழில் இலக்கணம் தொடர்பான கேள்விகள் அதிகம் வந்ததாகவும், அதுவும் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தனர். இந்த தேர்வில் கடந்த தேர்வை விட வி.ஏ.ஓ தொடர்பான கேள்விகள் சற்று அதிகமாக இருந்தது. வி.ஏ.ஓ பணி தொடர்பான புத்தகங்களை படித்து சென்றவர்களுக்கு இந்த கேள்விகள் ஈசியாக இருந்திருக்கும்.
பத்தாம் வகுப்பு தகுதியுடன் இந்த தேர்வை எழுத சென்றவர்களும், முதல் முறையாக தேர்வை எதிர்கொண்டவர்களும் இது சாதாரண தேர்வா, ஐஏஎஸ் தேர்வா என்று மலைக்க வைத்ததாக புலம்பினர்.
பழைய வினாக்கள் வரலாம் என்று படித்து சென்றவர்களுக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வை எதிர்கொண்டதால் கேள்விகள் இவ்வாறு கேட்கப்பட்டிருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்தனர். இந்த தேர்வில் ஏற்கனவே விதிமுறைகள் காரணமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.