உள்ளாட்சித் தேர்தலோடு காணாமல் போய் விடும் தேமுதிக.. சொல்கிறார் ஓடிப் போன வி.சி.சந்திரகுமார்!
ஈரோடு: உள்ளாட்சித் தேர்தலோடு தேமுதிக என்ற கட்சியே காணாமல் போய் விடும் என்று கூறியுள்ளார் தேமுதிகவிலிருந்து விலகி தனிக் கட்சி கண்டு அதையும் தற்போது திமுகவுடன் சேர்த்து விட்ட வி.சி.சந்திரகுமார்.
தேமுதிகவிலிருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏக்கள் வி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன்,சி.எச். சேகர் உள்ளிட்டோர் தற்போது திமுகவில் ஐக்கியமாகி விட்டனர். தங்களது மக்கள் தேமுதிகவை அதிகாரப்பூர்வமாக இணைக்கும் விழாவை சேலத்தில் வருகிற 17ம் தேதி நடத்துகின்றனர்.
இதுகுறித்து இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார் கூறுகையில், மக்கள் தேமுதிக அமைப்பு திமுகவுடன் இணையும் விழா வரும் 17ம் தேதி சேலத்தில் நடக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியை முதல்வர் ஆக்குவதுதான் எங்கள் குறிக்கோள். திமுகவுக்கு வலுசேர்க்க மக்கள் தேமுதிக, திமுகவுடன் சேர முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சென்று தேமுதிக அதிருப்தி நிர்வாகிகளையும்- தொண்டர்களையும் சந்தித்து பேசி வருகிறோம். தேமுதிகவின் ஆணி வேராக உள்ள கிளைக் கழக நிர்வாகிகள் உள்பட பல்வேறு தொண்டர்களை திமுகவில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் பேசும்போது, உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தால் கட்சி கலைக்கப்பட்டு பாஜகவுடன் சேர வாய்ப்பு உள்ளதாக பேசி உள்ளார். ஆகவே உள்ளாட்சி தேர்தலுக்குப்பிறகு தேமுதிக என்ற கட்சி காணாமல் போய்விடும்.
தேமுதிக இப்போது செயல்படாத கட்சியாக உள்ளது. கட்சி பொறுப்பு மற்றும் பணியிலிருந்து பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் விலகி உள்ளதாக கூறுவது ஏமாற்று வேலை. அது ஒரு நாடகம் என்றார் அவர்.