சமூக நல்லிணத்துக்கு எதிரான எச். ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்!
எச்.ராஜாவின் கருத்து சமூக நல்லிணக்கத்திற்கு உகந்தது அல்ல என்று விசிக தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டு உள்ளார்.
அரியலூர் : பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பேச்சு சமூக நல்லிணக்கத்திற்கு உகந்தது அல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சஆ
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடினார்.
தாய் பெரியம்மாள் மற்றும் குடும்பத்தினர், கிராம பொதுமக்கள், கட்சி தொண்டர்களுடன் சமத்துவ பொங்கலை மாரியம்மன் கோவில் அருகே வண்ண கோலமிட்டு, கரும்பு, தோரணங்கள் கட்டி திருமாவளவன் கொண்டாடின்னார்.
பிறகு பத்திரிகையாளர்களிடம் அவர் கூறுகையில், சாதி, மதவாதத்திலிருந்தும், ஊழல் முறைகேடுகளிலிருந்தும் தமிழகம் மீளவேண்டும். இந்த பொங்கல் நாளில் விவசாயத்தை பாதுகாக்க இந்த நாளில் நாம் அனைவரும் சூளுரை ஏற்போம்.
தமிழ் சமூகம் கொண்டாடுகின்ற இந்த நாளில் கர்நாடக முதல்வர் எந்த சூழ்நிலையிலும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என கூறியது அடிவயிற்றில் இடி விழுந்தது போல் உள்ளது. தை முதல் நாளுக்கு அவர் வாழ்த்து சொல்வதற்கு மாறாக வேதனையூட்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சொல்லியிருப்பது மிகுந்த வேதனையளிக்கின்றது.
கவிஞர் வைரமுத்து கூறிய சர்ச்சை கருத்து தொடர்பாக அவரே மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் அதை ஏற்காமல் எச்.ராஜா அநாகரீகமாக வெளியிட்ட கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இதனை தமிழக அரசு தொடர்ந்து வேடிக்கை பார்ப்பது சமூக நல்லிணத்திற்க்கு உகந்தது அல்ல. அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மதம், ஜாதி வெறியாட்டத்தை தூண்டும் வகையில் சில சக்திகள் முயற்சித்து வருகின்றது. இது மதசார்பற்ற மண் என்பதை தமிழக அரசு உறுதிபடுத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.