கள்ளகுறிச்சி கலவரம்: காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக.. திருமாவளவன் "குரலில் பேசிய" அண்ணாமலை.. பின்னணி
சென்னை : கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பட்டியலின மக்கள் குறி வைத்து கைது செய்யப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டியுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இதே குற்றச்சாட்டினை கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது.
பொதுமக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் பள்ளியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடினர். மேலும் பள்ளியின் வாகனத்தை தீயிட்டு எரித்தனர்.

பள்ளி நிர்வாகிகள் கைது
இதுமட்டும் இன்றி பாதுகாப்பிற்காக வந்த காவல்துறையினரையும் கல்வீச்சு தாக்கியதோடு, காவல்துறை வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவாகரம் குறித்து காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதுவரை சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் கைது செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமாவளவன்
இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்றில் கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தின் பின்னணியில் ஆதி திராவிடர்கள் மற்றும் பட்டியலின் மக்கள் இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்," சதிக்கும்பலுக்குத் துணைபோகும் வகையில் தற்போது உளவுத்துறையின் நடவடிக்கைகளும் அமைவதாக உள்ளது. இது தொடர்பான ஆங்கில நாளேட்டுச் செய்தி உள்நோக்கத்துடன் கூடியதாக உள்ளது. உளவுத் துறையிலுள்ள சாதிய வாதிகளின் சதியாகவே இது தெரிகிறது. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என கூறியிருந்தார்.

பாஜக அண்ணாமலை
இதனிடையே கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு பட்டியலினத்தவரே காரணம் என உளவுத்துறை முடிவுக்கு வந்தது எப்படி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்."கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தைக் கள்ள மவுனத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களது இயலாமையை ஒரு சமுதாயத்தினரின் தலையில் இறக்கி வைத்துள்ளனர். தி இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி தமிழக காவல்துறையினரின் செயல்பாட்டையும் உளவுத்துறையின் இயலாமையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கலவரத்துக்குக் காரணமான அனைவரும் பட்டியலினத்தைச் சார்ந்தோர் என்ற முடிவுக்கு உளவுத்துறை எவ்வாறு வந்தது?"என கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஒற்றுமை
இதே போல மாணவி மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்ட மக்கள் போராட்டத்தை சாதி போராட்டமாக மாற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் முயல்வதாகவும் ஆதி திராவிட மக்கள் குடியிருக்கும் குடியிருப்புகளை படித்த மாணவர்களை குறி வைத்து கைது செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக விசிக துணை பொது செயலாளர் வன்னியரசு குற்றம் சாட்டியிருந்தார் இந்த நிலையில் தான் தற்போது இந்த விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கைகோர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications