உணர்ச்சிவசப்படாதீங்க... சட்டப்பூர்வமான அரசியல் அணுகுமுறை அவசியம்: வீரமணி #cauvery
சென்னை: காவிரி பிரச்சனையில் உணர்ச்சிவசப்படாமல் சட்டப்பூர்வமான அரசியல் அணுகுமுறையை தொடர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமாக தஞ்சை மற்றும் டெல்டா பகுதிகளில் சம்பா பயிர் விளைச்சலுக்காவதுத் தண்ணீர் விட வேண்டும்; இன்றேல் விவசாயிகளின் வாழ்வாதாரமே பறிபோகும் அவலம் ஏற்பட்டு விடுவது உறுதி என்பதால்தான் உச்சநீதிமன்றத்தைத் தமிழ்நாடு அரசு நாடி, புது வழக்குப் போட்டது; நமது நியாயத்தினையும், தேவையையும் உணர்ந்த உச்சநீதிமன்ற அமர்வு, 10 நாள்களுக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்து விட - இருதரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு முடிவு செய்து ஆணையும் பிறப்பித்தது.
இதன்படி வேறு வழியின்றி கருநாடகம் தண்ணீரை இரண்டு நாள்களுக்கு முன் திறந்துவிட்டது. இந்த நீர்ப் பகிர்வே கூட,சம்பா விவசாயத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு ஆறுதல் அளிப்பதாகும்.
போதுமானது அல்லதான்..
நமது தேவையையொட்டியும், நடுவர் மன்றத் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டும் மழை தவறிய வறட்சிக் காலத்தில் எப்படி பகிர்வு இருக்கவேண்டும் என்பதையொட்டியும் இந்த 15 ஆயிரம் கன அடி நீர் 10 நாள்களுக்கு என்பது முழுமையாக ஏற்கத்தக்கதல்ல என்றாலும், நாம் அடுத்தகட்ட நடவடிக்கையை சட்டப்படி மேற்கொள்ளுகிறோம். தேவையான தண்ணீருக்கு வழிவகை செய்யப்பட வேண்டியது அவசரமும், அவசியமுமாகும்.
வெறுப்பு அரசியல்
ஆனால், கருநாடகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வெறுப்பை விதைத்து அறுவடை செய்வதையே வாடிக்கையாகக் கொண்டு, வாக்கு வங்கி அரசியல் நடத்தும் சில அமைப்புகளும், கருநாடகத்தில் உள்ள காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வராது செய்ய ‘இது ஓர் வரப்பிரசாதம்‘ என்று சில எதிர்க்கட்சிகளும் அடாவடித்தனத்தில், போராட்டங்களில் இறங்கியுள்ளன!
தமிழ் இளைஞர் மீது தாக்குதல்
தமிழ் இளைஞன் ஒருவன் முகநூலில் ஏதோ எழுதிவிட்டான் என்பதற்காக, அவனைத் தேடிப் பிடித்து அடித்து உதைத்து மன்னிப்புக் கேட்கச் செய்துள்ளனர் சில காலிகள். இதன் எதிர்வினை தமிழ்நாட்டில் கேட்கத் துவங்கினால், தேவையற்ற விளைவுகள்தானே ஏற்படும்.
கலவரத்துக்கு தீனியா?
இதனைக் கருநாடகம் உணரவேண்டும். எனவே, கருநாடக அரசு தமிழர்களுக்கும், தமிழரது நிறுவனங்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க உடனடியாக முன்வரவேண்டும். நீர்ப் பங்கீடு கோரிக்கை இரு மாநில மக்களின் வெறுப்புக்காகவோ, கலவரத்திற்கோ தீனி போடுவதாக அமைந்துவிடக் கூடாது!
உணர்ச்சிவயப்பட வேண்டாம்...
எனவே, இங்கும் உணர்ச்சிவயப்படாது, அறிவுப்பூர்வமான, சட்டப்பூர்வமான அரசியல் அணுகுமுறையிலிருந்து மாறாது, தீர்வு காணவேண்டியது அவசர அவசியம்.
இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.