6 ஆயிரம் ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமான வேளச்சேரி மணிமாறன்- முக்கிய பதவிக்கு குறி?
சென்னை: மதிமுகவில் தென்சென்னை மாவட்ட செயலாளராக இருந்த மணிமாறன் தனது ஆதரவாளர்கள் 6 ஆயிரம் பேருடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். வேளச்சேரி காந்தி சாலையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.
மதிமுகவில் இருந்த போது வைகோவுக்கு மிக மிக நெருக்கமான இடத்தில், முக்கிய இடத்தில் இருந்தவர் மணிமாறன். மதிமுகவின் கஜானா என்று கூட செல்லமாக மணிமாறனை சொல்வார்கள். அந்த அளவுக்கு செல்வாக்கானவர், கட்சிக்காக செலவு செய்ய அஞ்சாதவர்.
மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு, எடைக்கு எடை வெள்ளி கட்டி, தங்க பேனா, தங்க வாள் போன்ற விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி, அவரது தீவிர ஆதரவு மாவட்ட செயலராக வலம் வந்தவர் வேளச்சேரி மணிமாறன். மல்லை சத்யா வைகோவின் வலது கரம் என்றால் மணிமாறன் இடது கரமாக திகழ்ந்தவர்.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியை வைகோ உருவாக்கியதை மணிமாறன் விரும்பவில்லை. அதோடு மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இணைந்ததும் மணிமாறனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் மதிமுகவில் தனது செயல்பாடுகளை அவர் சுருக்கிக் கொண்டார்.
சட்டசபை தேர்தலின் போது வேளச்சேரி தொகுதியில் மணிமாறனை போட்டியிடுமாறு வைகோ கூறியபோதும் அதை ஏற்கவில்லை, ஒதுங்கியிருந்தார். கடந்த மே 15ம் தேதி கட்சியை விட்டு விலகுவதாக வைகோவுக்கு கடிதம் அனுப்பி விலகினார் மணிமாறன். சட்டசபைத் தேர்தல் முடிந்த பின்னர் ஜூன் மாதம் அண்ணா அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைத்துக்கொண்டார்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மணிமாறன் தனது ஆதரவாளர்கள் 6 ஆயிரம் பேருடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் நேற்று இணைந்தார். வேளச்சேரி காந்தி சாலையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது. வேளச்சேரி எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகரன், மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர். உள்ளாட்சித் தேர்தலில் முக்கிய பதவிக்கு மணிமாறன் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.