வீட்டை விற்று 2 மாதமாக நிவாரணம் வழங்கி வரும் பண்ருட்டி வேல்முருகன்- தினமும் படையெடுக்கும் பொதுமக்கள்
கடலூர்: பண்ருட்டியில் தாம் குடியிருந்த வீட்டை விற்று கடந்த 2 மாத காலமாக கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராம மக்களுக்கும் நாள்தோறும் சளைக்காமல் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன். ஜாதி, மதம் பார்க்காமல் அனைத்து பிரிவு மக்களுக்கும் விடிய விடிய நிவாரணப் பொருட்கள் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் வழங்கப்பட தினமும் மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது வேல்முருகன் வீடு.
கடலூரில் நவம்பர் மாதம் முதல் மழை வெளுத்து கட்டியது. அப்போது தென்னாப்பிரிக்காவில் சர்வதேச தமிழர் மாநாட்டில் அவர் கலந்து கொண்டிருந்தார். அந்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரது சகோதரர் மூலம் முதல் கட்ட நிவாரண உதவிகள் வழங்க ஏற்பாடு செய்தார். பின்னர் தமிழகம் திரும்பிய நாள் முதல் கடலூரிலும் சென்னையிலும் மாறி மாறி நாள்தோறும் நிவாரணப் பொருட்களை சளைக்காமல் தொடர்ந்து வழங்கி வருகிறார் வேல்முருகன்.

துரிதகதியில் நிவாரணங்கள்
கடலூர் மாவட்டத்தின் வெள்ளம் பாதித்த பெரும்பாலான குக்கிராமங்களை நேரில் சென்று சந்தித்த கையோடு, அந்த கிராமங்களில் வெள்ளம் புகாத வகையில், வெளியேறும் வகையிலான நடவடிக்கைகளையும் வேல்முருகன் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து வெள்ள நிவாரணமாக அடிப்படை தேவைகளான அரிசி, பாய், போர்வை, உடைகள் ஆகியவற்றை அனைத்து மக்களுக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதற்காக தன் வீட்டையே நிவாரணக் கிடங்காக மாற்றினார்.

லோடு ஏற்றி இறக்கும் பணி
இரவில் கட்சியினரோடு சேர்ந்து நிவாரணப் பொருட்களை பிரிப்பது தொடங்கி கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்கள் லோடுகளை ஏற்றி சென்று இறக்குவது என நள்ளிரவைத் தாண்டி செல்கிறது வேல்முருகனின் நிவாரண பணி.... பின்னர் அதிகாலையிலேயே வீட்டுக்கு வந்துவிடும் மக்களுக்கு பரிவோடு அவற்றை சளைக்காமல் வழங்கி வருகிறார்.

இரவில் பணி
கடலூரில் மட்டுமல்ல... வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் வேல்முருகனின் நிவாரணப் பணி தொடர்கிறது. சென்னையிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்... இரவு நேரங்களில் கைவிடப்பட்ட அகதிகளாக தெருவோரங்களில் தஞ்சமடைந்த மக்களை, பிச்சைகாரர்களை, கூவம் கரையோர மக்களைத் தேடிப் போய் அவர்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்கினார்.

அனைத்து மக்களுக்கும்...
சமூகத்தில் புறக்கணிக்கப்படும் திருநங்கைகள், நரிக்குறவர்கள், இருளர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், காட்டு குறவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பரிவுடன் நிவாரணங்களை தேடிச் சென்று வழங்கியிருக்கிறார்..

அகதிகள் முகாம்களில்...
அதேபோல் கடலூர், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் மீனவர்கள், ஈழத் தமிழர் அகதி முகாம்களுக்கும் போய் அவர்களுக்கும் பரிவுடன் தேவையான அனைத்து நிவாரணப் பணிகளை பல கட்டங்களாக வழங்கினார். தற்போது ஈழத்து கவிஞர் காசி ஆனந்தனை அழைத்துக் கொண்டு போய் அந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

விளம்பரம் தேவையில்லை
இத்தனை நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறோம் என உள்ளூர் செய்தியாளர்களுக்கு ஒரு அழைப்பு கொடுத்திருந்தால் 'இத்தனையாவது நாளாக நிவாரணப் பணி' என நாள்தோறும் செய்தி போடுவார்கள்.. ஆனால் இது மக்களுக்கான பணி.. இதற்கு ஏன் விளம்பரம் என்று நமது ஒன் இந்தியாவிடம் பேசிய வேல்முருகன் கூறினார். மேலும் நாங்கள் செய்திருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பணிகளுக்கு புகைப்பட ஆதாரங்கள்; வீடியோ ஆதாரங்களை நாங்கள் வைத்திருக்கிறோம். இதை ஊடகங்களிடம் கொடுத்து பிரசுரிக்க வேண்டும் என்று எண்ணியது கிடையாது. இருப்பினும் எங்களது நிர்வாகிகள் சிலர் நாள்தோறும் இதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டும் வருகின்றனர்... எங்களது நோக்கம் மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைய வேண்டும்; அனைத்தும் இழந்த ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட அனைத்து பிரிவு மக்களுக்குமான எங்களது சிறு ஆறுதல் நடவடிக்கைதான் இது என்றும் கூறுகிறார் வேல்முருகன்.

வீட்டை விற்று
பண்ருட்டியில் குடியிருந்த வீட்டை விற்றுதான் நிவாரணப் பணிகளை செய்து கொண்டுள்ளீர்களாமே என்று நாம் கேள்வி எழுப்பிய போது, ஆம்.. பண்ருட்டியில் நான் குடியிருந்தது என் உறவினர் வீடு. அது எனக்கு கொடுக்கப்பட்டது. என் உறவினரின் ஒப்புதலின் பேரில் முதலில் அதை அடமானமாக வைத்துதான் முதல் கட்ட நிவாரணப் பணி செய்தேன். ஆனால் அது போதுமானதாக இல்லை.. ஆகையால் அந்த வீட்டை விற்பனை செய்ய சம்மதித்து கூடுதல் தொகை பெற்று அடுத்த கட்ட நிவாரணப் பணிகளை செய்து கொண்டிருக்கிறேன்.

ஆதாரம் தருகிறேன்
இந்த பணிகள் முடிந்த உடன் அந்த பத்திரப் பதிவு செய்து கொடுக்கப்படும். நிச்சயம் அப்போது உங்கள் ஒன் இந்தியாவுக்கு அந்த பத்திரப் பதிவு நகல்களையும் தருகிறேன் என்று கூறும் அவர், என் பெயரில் ஒரு சென்ட் நிலம் கூட கிடையாது என்கிறார் ஆணித்தரமாக.

கொளத்தூர் மணி
தம்முடைய நிவாரணப் பணிகளை அறிந்த ஈழத்து உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் தம் வீட்டுக்கு வந்து தம்மோடு இணைந்து நிவாரணப் பொருட்களை வழங்கியிருப்பதை நெகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் பதிவு செய்கிறேன் என்கிறார் வேல்முருகன்.

வீடே பணியகமாய்.. காசி ஆனந்தன்
இது தொடர்பாக கவிஞர் காசி ஆனந்தனிடம் நாம் பேசினோம். அவர் கூறுகையில், 1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஈழத்துக்கு வருகை தந்த போது அரை பைசா வைத்து வாழ்க்கை நடத்துவதே பெரும்பாடான நிலையில் தமிழர்கள் இருந்தனர். ஆனால் இந்திய சுதந்திர போராட்டத்துக்கு அப்போது ரூ1 லட்சம் நிதி கொடுத்தவர்கள் தமிழர்கள். சிங்களர்கள் ஒரு பைசா நிதியும் தரவில்லை.
எங்களது விடுதலைப் போராட்டத்துக்கு உதவிய தமிழகத்துக்கு தமிழர்கள் பாதிப்படைகின்ற போது அவர்களுக்கு உதவுவது எமது கடமை. இதற்காக உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் நிவாரணப் பொருட்களைத் திரட்டுகின்றனர். அதை எமது இந்திய- ஈழத் தமிழர் நட்புறவு மையம் மூலமாக தமிழகத்தில் வழங்குகிறோம். நாங்கள் எப்போதும் இந்திய மக்கள் மீது மதிப்பும் நட்பும் கொண்டவர்கள்.

இரவும் பகலுமாக....
கடலூர் மாவட்டத்தில் 30 ஆண்டுகளாக மலையகத் தமிழர்கள் வாழும் சிலோன் குவார்ட்டர்ஸ் பகுதிக்கும் நிவாரண உதவிகளை வழங்கினோம். கடந்த 2 நாட்களாக வேல்முருகனின் வீட்டில்தான் தங்கியிருந்தேன். அந்த வீடே ஒரு பணியகம் போல இரவும் பகலும் இடைவிடாமல் செயல்படுகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து நிவாரணப் பொருட்களை பெற்று செல்கிறார்கள். அவர்களுக்கு அரிசி, பாய் போன்றவை வழங்கப்படுகின்றன. நானும் அவர்களுக்கு வழங்கினேன். எனக்கு இது பெருவியப்பாக இருக்கிறது.. பொதுவாழ்க்கையில் இத்தகைய அர்ப்பணிப்புடன் ஒருவரைப் பார்ப்பது பெருமையாக இருக்கிறது என்கிறார்.
வாக்குகளுக்காக நிவாரணப் பணிகள் என்றில்லாமல் மக்கள் துயர்துடைக்க களமிறங்கும் கரங்கள் பாராட்டுக்குரியவையே!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications