அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் வெற்றிவேல் மதிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு செல்லலாம்: ஹைகோர்ட் அதிரடி
Recommended Video
சென்னை: அதிமுக அம்மா, புரட்சித் தலைவி அம்மா அணியினர் நாளை நடத்த உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை வரும் 12ஆம் தேதி காலை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடத்த தமிழக முதல்வர் கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதற்காக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,780 பேர், செயற்குழு உறுப்பினர்கள் 250 பேருக்கும் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தள்ளுபடி
இந்த கூட்டத்தை நடத்த அனுமதிக்க கூடாது என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏவான (பெரம்பூர் தொகுதி) வெற்றிவேல் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று அந்த மனுவை விசாரணை நடத்திய ஹைகோர்ட் அதை தள்ளுபடி செய்துள்ளது.
அபராதம்
வெற்றிவேல் தனிப்பட்ட முறையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ள ஹைகோர்ட், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக கண்டனம் தெரிவித்ததோடு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதனால் நாளை பொதுக்குழு கூடுவது உறுதியாகியுள்ளது.
சசிகலா நீக்கமா?
அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவை கட்சியிலிருந்தே நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பன்னீர் அணியை சேர்ந்த மதுசூதனனிடம் கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கள் என்று பதில் அளித்தார்.
சாப்பிட்டுவிட்டு போகலாம்
இதனிடையே வழக்கு தொடர்ந்த வெற்றிவேலுக்கு 3 வாய்ப்புகளை ஹைகோர்ட் வழங்கியுள்ளது. ஒரு வாய்ப்பு, வெற்றிவேல் தேவைப்பட்டால் பொதுக்குழுவில் பங்கேற்கலாம், 2வது வாய்ப்பு அவர் பொதுக்குழுவில் பங்கேற்காமலும் இருக்கலாம், 3வது வாய்ப்பு அவர் பொதுக்குழுவில் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு செல்லலாம். இவ்வாறு ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.