நாயி.. தூக்கி அடிச்சிருவேன்.. த்தூ.. பத்திரிகையாளர்களுக்கு விஜயகாந்த் கொடுத்த பரிசுகள்
சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே செய்தியாளர்களை எள்ளி நகையாடி, கேவலப்படுத்தும் போக்கினை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தை, ஜெயலலிதா, கருணாநிதிக்கு மாற்றாக ஊதி பெரிதாக்கியது ஊடகங்கள்தான். சில நடுநிலை ஊடகங்களே விஜயகாந்த்துக்கு அதிக ஆதரவை அள்ளித்தந்தன. இதன்மூலம், ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதில் அவை வெற்றி பெற்றன.
பண்டிகை நாட்களில் பிரியாணி வாங்கிக்கொடுப்பது போன்றவற்றை முன்னிருத்தி, மனிதாபிமானத்தின் சிகரம் என்பது போல விஜயகாந்த்தை தூக்கிப்பிடித்தன பல ஊடகங்கள்.
என்ன தகுதி?
தமிழ் மொழி அறிவு, நிர்வாக திறமை, வரலாற்று புலமை, தனிப்பட்ட கொள்கை என எதுவுமின்றி இருந்தாலும், மாற்றுசக்தியாக வேறு யாரும் உருவாக முடியாத நிலையில், வேறு வழியின்றி விஜயகாந்த்தை தூக்கிப்பிடித்தன ஊடகங்கள்.
அதிர்ச்சி
ஆனால், சினிமா செய்தியாளர்களை நடத்துவதை போலவே, அரசியல் செய்திகளை சேகரிக்கும் நிருபர்களையும் விஜயகாந்த் மரியாதை குறைவாக நடத்துவார் என்பதை அந்த ஊடகங்கள் எதிர்பார்க்கவில்லை.
வாடிக்கை
கடந்த சில ஆண்டுகளாகவே செய்தியாளர்களை எள்ளி நகையாடி, கேவலப்படுத்தும் போக்கினை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
அசிங்கம்
2012 அக்டோபர் மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் தன்னிடம் வினா எழுப்பிய ஒரு செய்தியாளரை, "உன் பத்திரிகையாடா எனக்கு சம்பளமாடா தருது, நாயி!" என அருவருக்கத் தக்க முறையில் பேசி அவரை அடிக்கப் பாய்ந்தார்.
தூக்கி அடிச்சிருவாராம்
2015 ஏப்ரலில் டெல்லியில் தன்னிடம் கேள்வி கேட்க முற்பட்ட ஒரு செய்தியாளரிடம் உனக்குப் பேட்டி கொடுக்கணும்கிற அவசியம் எனக்குக் கிடையாது; பட்டுப் பட்டுனு பேசிருவேன் போய்யா...." என்றார். அதே நாளில் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது "கம்னு இருக்க மாட்டியா... தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க" என்றபடி இருக்கையை விட்டு எழுந்து செய்தியாளரை அடிக்க எத்தனித்தார்.
துப்புகிறாராம்
செய்தியாளர்களுக்கு எந்த வகையான மரியாதையை விஜயகாந்த் தந்து வருகிறார் என்பதற்கு சிறு உதாரணங்களே மேலே சொல்லப்பட்டவை. அதன் உச்சமாக நேற்று சென்னை மத்திய கைலாசில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது "ஜெயலலிதாவைப் பார்த்து இந்தக் கேள்வியை உங்களால் கேட்டுவிட முடியுமா?.... பயப்படுவீங்க... பத்திரிகைக்காரங்களா நீங்க?..... த்தூவ்.." என்று செய்தியாளர்களை பார்த்து உமிழ்ந்துள்ளார். ஜெயலலிதா பிரஸ் மீட் கொடுத்தால் கேட்கத்தான் செய்வோம் என நிருபர் பதில் சொன்னதற்கு, ஏன் பிரஸ் மீட் கொடுக்கலை என்று கேளுங்கள். உங்க முதலாளிங்க சொன்னா நீங்க கேப்பீங்க" என்று செய்தியாளர்களைப் பார்த்து கூறியுள்ளார்.
வன்மம்
தேர்தல் நெருங்கி வரும் வேளையிலாவது தெளிவாக நடந்து கொள்வார் என்று எதிர்பார்த்தால் அதிலும் ஊடகத்தாருக்கு ஏமாற்றமே. செய்தியாளர்கள் மீது தொடர்ந்து வன்மத்தைக் காட்டி வரும் விஜயகாந்த்துக்கு பல பத்திரிகையாளர் மன்றங்கள் மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டு வருகிறது.
என்ன அவசியம்
விஜயகாந்தின் வசவுகளையும், அடிகளையும் வாங்கிக் கொண்டு கைகட்டி சேவகம் பண்ணுகிற தேவை அவர் மூலம் ஆதாயத்தை எதிர் நோக்கியுள்ள அவரது கட்சியனருக்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், ஜனநாயகத்தின் நான்காவது தூணான செய்தியாளர்களுக்கு அப்படி ஒரு அவசியமே இல்லை.
தனிமைப்படுத்தும் எச்சரிக்கை
இனி வரும் காலங்களில் செய்தியாளர்களுக்கு உரிய மரியாதையை அவர் தந்து பதிலளிக்க வேண்டும்; இல்லா விட்டால் தங்களது மரியாதையை நிலைநிறுத்திக் கொள்ள விஜயகாந்தைத் தனிமைப்படுத்தும் முடிவினை செய்தியாளர்கள் எடுக்க நேரிடும் என சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் எச்சரித்துள்ளது.
பிரஸ் கிளப் கண்டனம்
பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றுகூட தெரியாத விஜயகாந்த் தேமுதிக கட்சியின் தலைவர். தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் என்பது வேதனைக்குறியது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் விஜயகாந்த் தனது செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். விஜயகாந்த் மன்னிப்பு கேட்காத நிலையில் அவர் தொடர்பான செய்திகளை தவிர்க்கவும் ஊடக நிறுவனங்கள் தயங்கக்கூடாது என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டித்துள்ளது.
லைவ் ஆக்ஷன்
சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான நாக்கை துருத்தி, அடிப்பது போல பாவனை செய்த சம்பவம் ஊடகத்தில் வெளியானபோது, ஏதோ ஆளும் கட்சிதான் திட்டமிட்டு, சில காட்சிகளை வெட்டி காண்பித்துவிட்டதோ என்று பலரும் எண்ணினர். ஆனால், இப்போதெல்லாம், லைவாகவே விஜயகாந்த் தனது சுயரூபத்தை காட்டிவருவதால், சட்டசபை நிகழ்ச்சி உண்மைதானப்பா.. என மக்கள் பேச தொடங்கியுள்ளனர்.