கலகலத்துப் போன தேமுதிக.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை
சென்னை: தேமுதிக கலகலத்துப் போயுள்ள நிலையில் கட்சி நி்ர்வாகிகள், எம்.எல்.ஏக்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
தேமுதிக கொறடாவாக இருந்த வி.சி.சந்திரகுமார், எம்எல்ஏக்கள் பார்த்திபன், சிஎச் சேகர் மற்றும் 7 மாவட்டச் செயலாளர்கள் தேமுதிக தலைமைக்கு எதிராக நேற்று பகிரங்கமாக வெளியே வந்தனர்.
விஜயகாந்த்தையும், பிரேமலதா விஜயகாந்த்தையும் அவர்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும் திமுக கூட்டணியில் சேரக் கோரி கெடுவும் விதித்தனர். இதையடுத்து அத்தனை பேரையும் மொத்தமாக கட்சியை விட்டு தூக்கி எறிந்தார் விஜயகாந்த்.
இந்த நிலையில் இன்றும் அதிருப்தியாளர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி பிரேமலதாதான், மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக சேரக் காரணம் என்று குற்றம் சாட்டிப் பேசினர்.
இந்தப் பின்னணியில் தேமுதிக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்களின் அவசரக் கூட்டத்திற்கு விஜயகாந்த் ஏற்பாடு செய்தார். அதன்படி அந்தக் கூட்டம் இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூடியது. அதில் சுதீஷ், பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன், பார்த்தசாரதி எம்.எல்.ஏ உள்ளிட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.