ராமதாஸை குரங்குன்னு சொன்னீங்களே கேப்டன்.. ஸ்டாலின் நக்கல்!
நாமக்கல்: குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பாமக கூட்டணியை மாற்றிக்கொண்டிருக்கிறது என்று சொன்னவர் விஜயகாந்த். அதுமட்டுமல்ல, அதே விஜயகாந்த், ராமதாஸ் எந்த சமூக நீதி போராட்டத்திலாவது கலந்து கொண்டுள்ளாரா. இவர் எத்தனை வன்னியர்களுக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்படிப்பட்டவரை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளர் காந்திசெல்வனை ஆதரித்துப் பிரசாரம் செய்தபோது இப்படி நக்கல் விட்டுப் பேசினார் ஸ்டாலின்.
நாமக்கல் பிரசாரத்தில் ஸ்டாலின் பேசியதிலிருந்து....
ராமதாஸ் பற்றி விஜயகாந்த் சொன்னது என்ன..
தேமுதிக வேட்பாளர் இந்த தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். மகிழ்ச்சி. அதில் எந்த குறையும் சொல்லவில்லை. ஆனால் அந்த கட்சியின் தலைவர், டாக்டர் ராமதாசை பற்றி கூறியதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
மரத்துக்கு மரம் தாவும் குரங்கு
டாக்டர் ராமதாசை பற்றி, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய நடிகர் விஜயகாந்த் கூறிய ஒரு கருத்து, குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பாமக கூட்டணியை மாற்றிக்கொண்டிருக்கிறது என்று சொன்னவர் விஜயகாந்த்.
அது மட்டுமல்ல...
அதுமட்டுமல்ல, அதே விஜயகாந்த், ராமதாஸ் எந்த சமூக நீதி போராட்டத்திலாவது கலந்து கொண்டுள்ளாரா. இவர் எத்தனை வன்னியர்களுக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமுதாயத் தலைவர் ராமதாஸ்
டாக்டர் ராமதாஸ் இன்று கொள்கையில் வேறுபட்டிருக்கலாம். கூட்டணியில் வேறுபட்டிருக்கலாம். ஆனால் தன்னை ஒரு சமுதாயத்தினுடைய தலைவராக அடையாளம் காட்டிக்கொண்டிருப்பவர்.
கலைஞர் ராமதாஸை விட்டுக் கொடுத்ததே இல்லை
கலைஞர், ராமதாசை குறிப்பிட்டு சொல்கிறபோது, என்றைக்கும் அவரை விட்டுக்கொடுத்து பேசியது கிடையாது. இந்த ஆட்சியில் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல் குரல் கொடுத்தவர் கலைஞர். அப்படிப்பட்ட ராமதாசை பற்றி விஜயகாந்த் இப்படி பேசியிருக்கிறார்.
எதற்காக இதைச் சொல்கிறேன்..
எதற்காக இதை சொல்லுகிறேன் என்றால், இவர்களெல்லாம் சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்திருக்கிறார்கள் பாஜகவோடு.
இதுதான் வேடிக்கை
புதுச்சேரியில் திமுக போட்டியிடுகிறது. அதிமுக போட்டியிடுகிறது. அதேபோல் ஆளும் கட்சியாக இருக்கக் கூடிய என்.ஆர்.காங்கிரஸ் ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அது பாஜக கூட்டணியில் உள்ளது. அதே பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளரும் போட்டியிடுகிறார். இதுதான் வேடிக்கை.
அவருக்கு இவுரு.. இவருக்கு அவுரு...
பாமக வேட்பாளருக்கு விஜயகாந்த் ஆதரவு தருகிறார். என்.ஆர்.காங்கிரசுக்கு பாஜக ஆதரவு தருகிறது. இது மெகா கூட்டணி என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.
புரிந்து கொள்ளுங்கள் மக்களே...
இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொன்னேன் என்று பொடி வைத்துப் பேசி விட்டுப் புறப்பட்டுப் போனார் ஸ்டாலின்.