ஆண்டவனோட மட்டும் கூட்டணி வைத்திருந்தால் தேமுதிக தேறியிருக்குமோ?
சென்னை: எந்த கட்சியோடும் கூட்டணி வைக்காமல் நாம பாட்டுக்கு ஆண்டவனோட மட்டும் கூட்டணி வைத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்ற புலம்பல் சத்தம் கோயம்பேடு தேமுதிக அலுலகம் பக்கமிருந்து கேட்டுக் கொண்டுள்ளது. 'நம்மலால கூட்டணி கெட்டுச்சா, கூட்டணியால நம்ம கெட்டோமா' என்ற பட்டிமன்றம் அக்கட்சி வட்டாரத்தில் நடந்து கொண்டுள்ளது.
காந்த்.. விஜயகாந்த்..
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என ரசிகர்கள் பார்த்திருந்து, கண்கள் பூத்ததுதான் மிச்சம். அந்த சூழ்நிலையில் ரஜினிகாந்த்துக்கு பதிலாக மற்றொரு 'காந்த்' அரசியல் பிரவேசம் செய்ய முடிவெடுத்தார். காந்த் என்ற பெயரின் மீதான காந்தசக்தியாலோ என்னவோ 2005ம் ஆண்டு மதுரையில் தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் விஜயகாந்த்தால் ஆரம்பிக்கப்பட்டபோது அப்படியொரு எழுச்சியை மக்களிடம் பார்க்க முடிந்தது.
ஆண்டவனோடுதான் கூட்டணி
கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டே, 2006ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலை அக்கட்சி எதிர்கொண்டது. ஆண்டவனோடும், மக்களுடனும் மட்டுமே கூட்டணி வைப்பேன் என்று முழங்கிய, விஜயகாந்த், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். ஆனால் விருதாச்சலத்தில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். வேறு வேட்பாளர்கள் வெற்றி பெறாவிட்டாலும்கூட, அவரது கட்சிக்கு விழுந்த மொத்த வாக்குகள் சுமார் 30 லட்சம். இது மொத்த வாக்காளர்களில் 8.38 சதவீதம். ஆரம்பித்த ஓராண்டில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு ஒரு கட்சி பெற்ற அதிக வாக்கு சதவீதமாக இது வர்ணிக்கப்பட்டது.
வாக்கு சதவீத வளர்ச்சி
2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும், தனது கொள்கையில் உறுதியாக இருந்த விஜயகாந்த் கூட்டணியில்லாமல் 39 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கினார். இம்முறையும் எந்த வேட்பாளரும் வெற்றி பெறவில்லை என்றாலும், வாக்கு சதவீதம் 10.1-ஆக உயர்ந்தது. 35 தொகுதிகளில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமாக வாக்குகளை அக்கட்சி பெற்றது. தமிழகத்தில் தேமுதிக வளர்ச்சியடைந்ததை அந்த வாக்கு சதவீதம் வெளிச்சம் போட்டு காண்பித்தது.
அம்மாவோட கூட்டணி
ஆனால் 2011ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் எடுத்த ஒரு முடிவு அவரை அரசியல் பாதாளத்துக்கு கைபிடித்து அழைத்துச் சென்றுவிட்டது. ஆண்டவனுடன் மட்டுமே கூட்டணி என்று கூறிவந்த விஜயகாந்த் அம்மாவுடன் கூட்டணிக்கு இசைந்தார். ஒவ்வொரு தேர்தலிலும் பெருவாரியான வாக்குகளை பிரித்து விஜயகாந்த் அள்ளிச்சென்று கொண்டிருந்ததால் வெற்றிக்கு அவரது கட்சி தேவை என்று அதிமுக நினைத்து சேர்த்துக் கொண்டது. அக்கட்சிக்கு 41 தொகுதிகளும் அளிக்கப்பட்டன. ஆனால் விஜயகாந்த் தனியாக போட்டியிட வேண்டும் என்றே அவரை மலைபோல் நம்பிய தொண்டர்கள் கருதினர்.
நாவடக்கம் தேவை
அதிமுக கூட்டணியுடன் சந்தித்த சட்டசபை தேர்தலில் தேமுதிக 29 இடங்களில் வெற்றிபெற்றது. திமுக மிகமோசமான தோல்வியை தழுவியதால் எதிர்க்கட்சி தலைவராகவும் விஜயகாந்த்தே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியை சேர்ந்தவை என்ற பெருமையுடன் போய்க்கொண்டிருந்தது விஜயகாந்த் அரசியல் பயணம். ஆனால் சிறிது காலத்தில் அதிமுகவுடன், தேமுதிக பகைமை பாராட்ட ஆரம்பித்து. இரு கட்சிகளும் எலியும், பூனையுமாக மோதிக்கொண்டன. சட்டசபையில் நாக்கை துருத்தி விஜயகாந்த் பேசி ரணகளமாகிப்போனது. இதன்பிறகு கூட்டணியில் இருந்து தேமுதிகவை விலக்குவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
பில்டிங் ஸ்ட்ராங்குதான் ஆனா..
ஜெயலலிதாவுடனான மோதலுக்கு பிறகு விஜயகாந்த் மீது நம்பிக்கையிழந்த அக்கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் வரிசையாக அதிமுக சார்பு நிலையை எடுக்க தொடங்கினர். சட்டசபையில் அவர்கள் தனித்து இயங்கினர். இதனால் விஜயகாந்த்தின் தலைமை பண்பு மீது பொதுமக்களுக்கு மட்டுமின்றி தொண்டர்களுக்கே சந்தேகம் எழுந்தது. கட்சியின் அடித்தளம் ஆடத்தொடங்கியது.
தேர்தல் நேர டிமாண்ட்
இருப்பினும் அவர் கட்சியின் வாக்கு வங்கிக்காக அரசியல் தலைவர்கள் மத்தியில் டிமாண்ட் இருந்து வந்தது. நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த்தை வளைத்துப்போட அதிமுகவை தவிர்த்து அத்தனை கட்சிகளும் முயன்றன. ஒருவழியாக 14 சீட்டுகள் வேண்டும் என கறாராக பாஜகவிடம் கேட்டுப்பெற்று அந்த கூட்டணியில் சேர்ந்தார்.
திருவள்ளூர், மத்திய சென்னை, வடசென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. ஆனால் அத்தனை தொகுதியிலும் படுதோல்வியடைந்தது. அக்கட்சி வெறும் 5.2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
தனித்து போட்டியிட்டிருக்கலாம்
விஜயகாந்த் தனித்து போட்டியிட்டவரை அவரால் பிற கட்சிகள் வாக்குகள்தான் சிதறின. தேமுதிகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததுதான் அரசியல் வாழ்வில் விஜயகாந்த் செய்த பிழை என்கிறார்கள் விமர்சகர்கள். "அரசியலில் இவர் வேறுமாதிரி" என்ற ஒரு பிம்பம் விஜயகாந்த் மீது தொடக்கத்தில் இருந்தது. அதுதான் மக்களை அவரை நோக்கி கவனிக்க செய்தது.
அடுத்து திமுகவுடன் கூட்டணியா கேப்டன்?
ஆனால் கூட்டணிக்குள் அவர் சென்றதும், இவரும் மற்றவர்களை மாதிரிதானா என்ற எண்ணம் மக்களிடம் பரவிவிட்டது. அதை இனிமேல் மாற்ற முடியாது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். உளுந்தூர்பேட்டை பொதுக்கூட்டத்தில் தொண்டர்களிடம் விஜயகாந்த் கருத்து கேட்டபோதே அவர்களும் தனித்து போட்டியிடலாம் என்றுதான் உரக்க கூறினர். ஆனால் கூட்டணி ஆசையால் விஜயகாந்த் மீண்டும் பழைய ரூட்டுக்கே சென்று சிக்கிக்கொண்டார். தனித்து போட்டியிருந்தால் வெற்றி கிடைக்காது போனாலும் விஜயகாந்த் மீதான நம்பிக்கை தொடர்ந்திருக்கும். அடுத்து திமுகவுடன் கூட்டணியா கேப்டன்?