நிலத்தடி நீர் பாதிப்பு.. ஓபிஎஸ்-க்கு சொந்தமான கிணற்றை வாங்க கிராம மக்கள் முடிவு
தேனி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை கிணற்றுடன் சேர்த்து வாங்க லட்சுமிபுரம் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான தோட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தங்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக கடந்த 20 நாட்களாக கிராம மக்கள் சாலை மறியல், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பிரச்னைக்குத் தீர்வுகாண்பது தொடர்பாக கிராம மக்களுடன் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேற்றிரவு தேனி சுற்றுலா மாளிகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 40 ஏக்கர் நிலத்தை விற்க ஓ.பி.எஸ். முடிவு செய்ததாக தெரிகிறது. மேலும் அந்தக் கிணற்றையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கவும் ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். இதற்காக 3 மாத கால அவகாசம் அவர் கேட்டுள்ளார். அந்த 3 மாதம் வரையும் கிணற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் ஓபிஎஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை கிணற்றுடன் சேர்த்து வாங்க லட்சுமிபுரம் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு குடும்பமும் குறைந்தபட்சம் தலா ரூ20, 000 கொடுத்து நிலத்தை வாங்க போராட்டக்குழு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications