கிணறு விவகாரம்.. ஓபிஎஸைக் கண்டித்து பெரியகுளம் அருகே இன்று கடையடைப்பு, உண்ணாவிரதம்!
தேனி: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு சொந்தமான கிணறுகளால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி பெரியகுளம் அருகே இன்று கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
தேனி பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் ஓபிஎஸ்க்கு சொந்தமான தோட்டத்தில் தோண்டப்பட்டுள்ள 200 அடி ஆழ கிணறுகளால் அப்பகுதியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஓபிஎஸ்க்கு சொந்தமான கிணறுகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கிராம மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமரசம் செய்து உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அமைதி காத்து வந்தனர்.
இதனிடையே லட்சுமிபுரம் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள் ஒன்றுகூடி இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என வலியுறுத்தி ஓ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான கிணறை நேற்று முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினர் இதனை தடுக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து முற்றுகையிட முயன்ற ஆண்கள் சிலரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று லட்சுமிபுரத்தில் கடைகளை அடைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர். மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.