மரக்காணம் கலவரம்: பாமக தொண்டர் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை
விழுப்புரம்: மரக்காணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் தலித்துகளுக்கும் இடையே நடந்த கலவரம் தொடர்பாக பாமக தொண்டர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந்தேதி மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு பெருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க.வை சேர்ந்த தொண்டர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்களில் சென்றனர். மரக்காணத்தில் அவர்கள் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும் அவர்களுக்கும்இடையே மோதல் ஏற்பட்டது. அது கலவரமாக மாறியது. இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பா.ம.க. தொண்டர் செல்வராஜ் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் மரக்காணம் பகுதியில் உள்ள விடுதலை சிறுத்தை சிறுத்தை கட்சியை சேர்ந்த மணிகண்டன், ரகு, செந்தில்குமார், பாரிநாதன், ராஜு, சேகர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
9.5.2013 அன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் 100 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார்கள். 5.9.2013ல் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு விசாரணை திண்டிவனம் 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நீதிபதி செல்வமுத்துகுமாரி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. அனைத்து விசாரணையும் முடிவடைந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டன், ரகு, செந்தில்குமார், பாரிநாதன், ராஜு, சேகர் ஆகிய 6 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி செல்வமுத்துகுமாரி தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி பி.செல்வ முத்துக்குமாரி தீர்ப்பு வழங்கினார். மேலும் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications