நாயுடு-தேவர்- நாடார்: ஜாதி கணக்குப் போட்டு விருதுநகரை வெல்ல நினைக்கும் கட்சிகள்
விருதுநகர்: "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாரதி பாடிவிட்டு சென்றாலும் தேர்தலில் ஜாதியின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. தொகுதியில் உள்ள ஜாதி வாக்காளர்களை கணக்கு போட்டுதான் வேட்பாளர்களை தேர்வு செய்கின்றன அரசியல் கட்சிகள்.
விருதுநகர் தொகுதியில் குறிப்பிட்ட சமூகத்தினரின் ஓட்டுதான் வேட்பாளரை வெற்றி பெற வைப்பதில் முக்கிய பங்காற்றும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதிமுகவின் வைகோ
விருதுநகர் லோக்சபா தொகுதியில் மதிமுக சார்பில் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த வைகோ நிற்பது உறுதியாகிவிட்டது.
ஜாதி கணக்கு
இந்த நிலையில், அதிமுக, திமுக கட்சிகளும் சாதி கணக்குப் போட்டே தேவர், நாடார் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றன.
விருதுநகரில் ஜாதி ஆதிக்கம்
தற்போது விருதுநகர் தொகுதியாக மாற்றப்பட்டுள்ள இந்த தொகுதி 2009 லோக்சபா தேர்தலுக்க முன்பு சிவகாசி தொகுதியாக இருந்தது. இந்த தொகுதியில் அனைத்து கட்சி களுமே ஜாதிவாரியான ஓட்டுகளை குறிவைத்தே வேட்பாளர்களை நிறுத்தி வந்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் வெற்றி
1967 தேர்தலில் எஸ்.டபிள்யூ.ஏ-வை சேர்ந்த ராமமூர்த்தி வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பி.ஏ.நாடார் தோல்விடையந்தார். 1971 மற்றும் 1977-ல் காங் கிரஸ் கட்சியின் ஜெயலட்சுமி வெற்றி பெற்றார்.
அதிமுகவின் வெற்றி
அடுத்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் சௌந்தர்ராஜனிடம் தோற்றுப் போனார் ஜெயலட்சுமி. 1984 தேர்தலிலும் சிபிஐ வேட்பாளர் சீனிவாசனை வீழ்த்தினார் சௌந்தர்ராஜன்.
வைகோவின் தோல்வி
1989 தேர்தலில் அதிமுக தரப்பில் காளிமுத்துவும் அவரது நண்பர் வை.கோபால்சாமி திமுக தரப்பிலும் மோதினார்கள். அப்போது கம்யூனிஸ்ட் கூட்டணி இருந்தும் காளிமுத்துவிடம் தோற்றார் வை.கோபால்சாமி.
சஞ்சய் ராமசாமி தோல்வி
1991 தேர்தலில் அதிமுக-வின் கோவிந்தராஜுலு சிபிஐ வேட் பாளரை வீழ்த்தினார். பதிலுக்கு 1996 ல் அதிமுக வேட்பாளர் சஞ்சய் ராமசாமியை வீழ்த்தினார் சிபிஐ வேட்பாளர் அழகிரிசாமி.
வைகோவின் வெற்றி
1998 தேர்தலில் அழகிரி சாமியையும் அடுத்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராமசாமியையும் தோற்கடித்து மதிமுக பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி வெற்றி பெற்றார்.
3 தேர்தல்களில் மதிமுக வெற்றி
2004 தேர்தலில் அதிமுக வேட் பாளர் கண்ணனை தோற்கடித்து மதிமுக-வின் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் வெற்றிபெற்றார். தொடர்ந்து 3 தேர்தல்களில் வெற்றி வாகை சூடிய மதிமுக, 2009 தேர்தலில் தோற்றுப் போனது.
அடையாளம் இல்லாத வேட்பாளர்
2009ம் ஆண்டு விருதுநகர் தொகுதியாக மாற்றப்பட்ட பின்னர் அங்கு போட்டியிட்ட வைகோவை தொகுதிக்கு சற்றும் அறிமுகமில்லாத காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் வெற்றி பெற்றார். அப்போது ஜாதி வாக்குகள் வைகோவிற்கு கைகொடுக்கவில்லை. பணம்தான் மாணிக்கதாகூருக்கு கைகொடுத்து வெற்றி வைத்தது என்ற பேச்சும் நிலவியது.
ஜாதி வெல்லுமா?
2014 தேர்தலில், கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளரும் முக்குலத்தோருமான டி.ராதா கிருஷ்ணனை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது அதிமுக. நாயுடு சமூகத்தினர் வைகோ-வை ஆதரிக்கும் பட்சத்தில் முக்குலத் தோரின் வாக்கு வங்கியை வளைக்க முடியும் என்பது அதிமுக-வின் கணக்கு.
அண்ணாச்சியை இறக்கிய திமுக
இதை அறிந்தே, தொகுதியில் கணிசமாக கலந்திருக்கும் நாடார் சமூகத்தைச் சேர்ந்த மதுரையில் வசிக்கும் வர்த்தக சங்க பிரமுகர் ரத்தினவேலை இறக்குமதி செய்திருக்கிறது திமுக. வேட்பாளர் ரத்தினவேல் சிவகாசி நாடார். இவரை விருதுநகர் நாடார்கள் எப்படி ஆதரிப்பார்கள்?'' என்று கொளுத்திப் போடுகின்றனர் சிலர்.
வைகோவின் ராசி எப்படி?
சிவகாசி தொகுதியாக இருந்தவரை வைகோவிற்கும் மதிமுகவிற்கும் ராசியான இருந்தது. தொடர்ந்து 3முறை வெற்றி வாகை சூட வைத்தது. ஆனால் விருதுநகராக மாற்றப்பட்டப் பின்னர் தோல்வியையே பரிசளித்தது. அதை கவனத்தில் கொள்ளாமல் விருதுநகரில் வைகோ நிற்க காரணம் நாயுடு சமூக ஓட்டுக்களை நம்பித்தான்.
பொது வாக்காளர்கள்
நாயுடு, நாடார், தேவர் சமூக ஜாதியினர் மட்டுமல்லாது, செட்டியார்,யாதவர்,வன்னியர், உள்ளிட்ட பிற சமுதாய மக்களும் ஓரளவிற்கு வசித்து வருகின்றனர். அவர்களின் ஓட்டு யாருக்கு என்பதைப் பொருத்தே வேட்பாளாரின் வெற்றி வாய்ப்பு அமையும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.