அடிதடிக்குப் பிறகும் தொடர்ந்து வாக்குப்பதிவு.. தேர்தலை நிறுத்த சரத் முயற்சிப்பதாக விஷால் அணி புகார்
சென்னை: நடிகர் சங்க தேர்தல் நடந்த வாக்கு மையத்தில் ஏற்பட்ட மோதலில் நடிகர் விஷால் தாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து வாக்குப் பதிவு நடந்தது. ஆனால் தேர்தலை நிறுத்த சரத்குமார் தரப்பு முயற்சித்ததாக விஷால் அணி புகார் கூறியது.
நடிகர் சங்க தேர்தல் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மற்றும் சரத்குமார் தலைமையிலான அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நடிகர், நடிகைகள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
இந்நிலையில் வாக்கு மையத்தில் வாக்களிக்க வந்தவர்களை தங்களுக்கு வாக்களிக்குமாறு இரு அணியினரும் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு அணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. இந்த மோதலில் சிக்கி நடிகர் விஷால் மயக்கம் அடைந்தார். மயக்கம் தெளிந்த பிறகு அவரை அழைத்துச் சென்று கேரவனில் ஓய்வெடுக்க வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்து வந்ததாகவும், ஆனால் தேர்தலை நிறுத்த சரத்குமார் தரப்பு முயற்சித்ததாகவும் விஷால் அணியினர் புகார் தெரிவித்தனர்.