நாகையில் குடிநீர் பஞ்சம் - காலி குடங்களுடன் பெண்கள் தர்ணா...பரபரப்பு
குடிநீர் பிரச்சினை காரணமாக காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே பரவாக்கோட்டை கிராமத்தில் கடந்த இருபது நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து நேற்று காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மன்னார்குடிக்கு அருகில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் தோப்புத்தெரு, திலகர் வீதி உள்ளிட்ட நான்கு பகுதிகளில் சுமார் இரண்டாயிரம் மக்கள் வசிக்கின்றனர்.

இவர்களின் குடிநீர் தேவைகளுக்காக திலகர் வீதி பகுதியில் இருநூறு அடி ஆழத்திற்கு போர்வெல் ஒன்று போடப்பட்டு முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.
வரலாறு காணாத வறட்சியின் காரணமாக ஏற்கனவே இருநூறு அடியில் போடப்பட்டிருந்த போர்வெல் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் குடிநீர் விநியோகம் தடைபட்டது.
புதிய போர்வெல் போடக்கோரி ஏற்கனவே பொது மக்கள் போராட்டங்கள் நடத்தியதால் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தோப்புத்துறை பகுதியில் முன்னூறு அடி ஆழத்தில் புதிய போர்வெல் போடப்பட்டது. புதிதாக போடப்பட்ட போர்வெல்லுக்கு புதிய மோட்டார் வாங்காமல் ஏற்கனவே பழுதடைந்த பழைய மோட்டாரை பொருத்தி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
பழைய மோட்டாரும் அடிக்கடி பழுதாகி விட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நீரேற்றும் மோட்டார் முற்றிலும் பழுதடைந்து போய் விட்டது. இதனால் கடந்த இருபது நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெகுண்ட பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் குதித்தனர். தகவலறிந்து வந்த மன்னார்குடி டிஎஸ்பி அசோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.
Recommended Video

அதன் அடிப்படையில் இரண்டு நாட்களுக்குள் புதிய மோட்டார் பொருத்தி குடிநீர் விநியோகத்தை சரி செய்வதாக சிவகுமார் கொடுத்த உறுதிமொழியின் பேரில் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.












Click it and Unblock the Notifications