எங்ககிட்ட உள்ளது தாமரை இலை.. இரட்டை இலை இல்லை... பொன். ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் எங்களிடம் தாமரை இலை மட்டுமே உள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னமானது பிரதமர் நரேந்திர மோடியிடம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் கூறி வருகிறார். ஆனால் பாஜகவின் வெற்றிச் சின்னமான தாமரையின் இலை மட்டுமே எங்களுக்கு போதும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக சட்டசபையில் தாக்கல் செய்த பட்ஜெட்டால் எந்தவித பயனும் இல்லை. வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்கான திட்டங்கள் ஏதும் இல்லை.

மாநிலத்தின் வருவாயை பெருக்குவதற்கும், கிடைக்க வேண்டிய வருவாயை முறையாக வசூலிப்பதற்கும் தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கிக் கொண்டுதான் வருகிறது. தமிழகத்தில் நிலவும் அனைத்து போராட்டங்களுக்கும் மாநில அரசே காரணம். மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் இருப்பதால்தான் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் கூறியுள்ளார். அது முற்றிலும் தவறு. எங்களது வெற்றிச் சின்னமான தாமரையின் இலைதான் எங்களிடம் உள்ளது. அவர்கள் கூறும் இரட்டை இலையெல்லாம் இல்லை என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications