திமுக, அதிமுகவுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது.. அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் வைகோ!
தூத்துக்குடி: வரும் 2016ம் ஆண்டு தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் இதுவரை சிந்திக்கவே இல்லை. திமுக, அதிமுகவுடன் ஒருபோதும் கூட்டணி கூடாது என்ற கடந்தகால தேர்தலின்போது எடுக்கப்பட்ட எங்கள் பொதுக்குழுவின் முடிவினை நாங்கள் இதுவரை மறுபரிசீலனை செய்யவே இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 23வது மாநில பொதுக்குழுக்கூட்டம் இன்று தூத்துக்குடி ஏ.வி.எம் கமலவேல் மகாலில் நடந்தது. பொதுக்குழு கூட்டத்தினைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள்
தூத்துக்குடியில் இன்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 1511 உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். இக்கூட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அழிவிலிருந்து காப்பாற்றும் கடமை
தமிழகத்தின் வாழ்வாதாரங்களை சூழ்ந்துள்ள அழிவில் இருந்து காப்பாற்றும் கடமை தமிழக மக்களுக்கு இருக்கிறது. இந்த பிரச்சனையில் மக்களையும், தமிழ்நாட்டையும் காப்பாற்றிடும் நோக்கில் இதனை மதிமுக தோள்மேல் சுமந்து நின்று போராடி வருகிறது. தமிழகத்திற்கு எந்த காலமும் இதுமாதிரியான ஆபத்து வந்தது இல்லை.
கட்டளைகளை மீறும் கர்நாடகா
காவிரி நடுவர் நீதிமன்றத்தின் கொள்கைப்படி காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டக்கூடாது, புதியதாக பாசனப்பகுதிகளை உருவாக்க கூடாது என்பது போன்ற கட்டளைகளை மீறி கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணைகள் கட்டுவதற்கு முயன்று வருகிறது. இதற்காக புதியதாக 11லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பை உருவாக்கியுள்ளது.
பொய்யான காரணங்கள்
மேகதாட்டில் கட்டப்படும் அணையில் 48டி.எம்.சி தண்ணீரை சேமித்து வைத்திட கர்நாடக அரசு முயன்று வருகிறது. இந்த அணையின் நீரானது பெங்களூர், மைசூர் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் என்று பொய்யான காரணத்தை கூறி அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த இரண்டு அணைகள் போக காவிரியின் குறுக்கே நான்கு தடுப்பணைகளையும் கர்நாடக அரசு கட்ட இருக்கிறது.
சதிக்குத் துணை போகும் சதானந்த கெளடா
கர்நாட அரசின் இந்த சதிக்கு மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடாவும் துணைபோவது தமிழகத்திற்கு இழைக்கும் துரோக செயலாகும். அணை கட்டுவதற்கு தடை விதிக்ககோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மத்திய சட்ட அமைச்சரே இதற்கு துணைபோகும் போது இதில் நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்.
மோடி ஏன் நீக்கவில்லை
மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, நீர்வளத்துறை இந்த அணைகள் கட்டுவதற்கு அனுமதி கொடுக்க கூடாது. இந்த சதிக்கு துணைபோன அமைச்சரை மோடி அரசு ஏன் நீக்கவில்லை என்பதற்கு காரணம் தெரியவில்லை.
இது சாதாரண பிரச்சினை இல்லை
இந்த பிரச்னையை சாதாரணமாக எடுக்க கூடாது. காவிரியின் குறுக்கே இப்படி அணைகள் கட்டி விட்டால் மேட்டூர் அணைக்கு காவரியின் உபரிநீர் கூட எதுவும் வராது. இதனால் 5 கோடி மக்கள், 3 கோடி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். பாதி தமிழகமே அழிந்துபோய்விடும். எனவே இதனை தடுக்கவேண்டியது நமது தலையாய கடமையாகும்.
முற்றுகைப் போராட்டங்கள்
காவிரியின் குறுக்கே அணைகள் கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்தவும், நாசக்கார மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்கவும், மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பாக வரும் பிப்ரவரி 18ம் தேதி தலைநகர் சென்னையைத் தவிர்த்து புதுவையில் காரைக்கால் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும், மார்ச் 11ம் தேதி தலைநகர் சென்னையிலும், மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23ல் தலைநகர் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் முற்றுகைப் போராட்டத்தை காவிரி பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்போம்
இதுபோன்று நியூட்ரினோ திட்டத்தினை எதிர்க்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இடுக்கி அணை, முல்லை பெரியாறு அணைகள் பாதிக்கப்படும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகம், கேரளாவும் பாதிக்கப்படும். எனவே இதனை எதிர்த்தும் நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் இதில் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதுதான் தமிழகம். தமிழகம் இப்படித்தான் இருக்கிறது.
கேரள முதல்வரைச் சந்திப்பேன்
இதற்கான ஆதரவினை கேரள முதல்வரிடம் கேட்டுள்ளோம். வரும் 7ம் தேதி கேரள முதல்வர் உம்மன் சாண்டியை திருவனந்தபுரத்தில் நேரில் சந்தித்து பேச இருக்கிறேன். இந்த நேரத்தில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனையும் சந்தித்து பேசி ஆதரவு திரட்டிட திட்டமிட்டுள்ளேன்.
என் இனிய பொன் விழா!
நான் அரசியலுக்கு வந்து 50ஆண்டுகள் ஆன நிலையில் இதற்கான மாநாடு பொதுக்குழு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இனங்க வரும் ஜூன் 27, 28ம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது. வைகோவின் பொதுவாழ்வு பொன்விழா மாநாடு என்ற பெயரில் நடக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க என்னை நேசிக்கும் அனைத்து அரசியல் தலைவர்களையும் அழைக்க இருக்கிறேன். மம்தான பானர்ஜி, பரூக் அப்துல்லா, சந்திரபாபு நாயுடு, சரத்பவார், லல்லுபிரசாத்யாதவ், முலாயம்சிங், நிதிஷ்குமார், முன்னாள் எம்.பி.,பாப்பிராஜூ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அருமைத் தம்பி ஜோயல்
தூத்துக்குடியில் இந்த பொதுக்குழு கூட்டத்தை எனது அருமைத்தம்பி ஜோயல் மிகவும் சிறப்பாக நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் மதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த டி.கே.ஏ.இலக்குமணன் மீண்டும் மதிமுகவில் வாழ்நாள் உறுப்பினராக இணைந்துள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும்.
மதுவை ஒழிக்க மக்கள் சக்தி
தமிழகத்தில் மதுவை ஒழிப்பதற்கான மக்கள் சக்தியை திரட்டுவது எங்கள் முக்கிய நோக்கமாகும். எங்களின் மது ஒழிப்பு நடைபயணம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தாய்மார்கள், மாணவர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு எழுந்துள்ளது.
மதுவை ஒழிக்க மராத்தான்
மதுவின் தீமைகளை மாணவர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாராத்தான் ஓட்டத்தை துவங்கி நடத்தி வருகிறோம். பள்ளி தேர்வுகளுக்கு பின்னர் இது தொடர்ந்து நடைபெறும். மதுவிற்கு எதிரான விழிப்புணர்வை வேகப்படுத்திடும் பொருட்டு வரும் நாட்களில் வரும் நாட்களில் விழுப்புரம், திருவள்ளுவர், வேலூர் மாவட்டங்களில் வாகன பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம்.
போராட்டம் தொடரும்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும்வரை மதுவிற்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும். இலங்கையில் சிறீபாலசேனா பதவிக்கு வந்தபோதும் அங்கு தமிழர்களுக்கு ஒரு நன்மையும் நடக்கப்போவது இல்லை. ராஜபக்சேவின் மறுஉருவம் தான் இவர். வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் கூட்டத்தில் இலங்கையில் இயல்புநிலை திரும்பிவிட்டது என்பதை காட்டுவதற்கான இலங்கையின் கூட்டு சதியுடன் மத்திய அரசு இங்குள்ள அகதிகளை அங்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை நான் வரவேற்கிறேன்.
காவல்துறையை ஏவாதீர்கள்
காவிரி, மீத்தேன், நியூட்ரினோவிற்கு எதிரான எங்களின் மத்திய அரசின் அலுவலகங்களை முற்றுகையிடும் அறப்போராட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு தராதபோதும் எங்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் காவல்துறையை ஏவி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கூட்டணி குறித்து சிந்திக்கவே இல்லை
வரும் 2016ம் ஆண்டு தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் இதுவரை சிந்திக்கவே இல்லை. திமுக, அதிமுகவுடன் ஒருபோதும் கூட்டணி கூடாது என்ற கடந்தகால தேர்தலின்போது எடுக்கப்பட்ட எங்கள் பொதுக்குழுவின் முடிவினை நாங்கள் இதுவரை மறுபரிசீலனை செய்யவே இல்லை என்றார்.