முழுப்பூசணிக்காய் தோட்டத்தையே சோற்றில் மறைக்கப்பார்க்கிறார் தமிழிசை - சி.ஆர்.சரஸ்வதி பாய்ச்சல்
சசிகலா குடும்பத்தின் மீது நடத்தப்படும் ரெய்டு என்பதே ஒரு திட்டமிட்ட பழி வாங்கும் நடவடிக்கை என்று சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்து உள்ளார்.
Recommended Video
சென்னை : சசிகலா குடும்பத்தின் மீது நடத்தப்படும் ரெய்டு விவகாரத்தில் முழுப்பூசணிக்காய் அல்ல; பூசணிக்காய் தோட்டத்தையே சோற்றில் மறைக்கப்பார்க்கிறார் தமிழிசை செளந்தரராஜன் என சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினர், உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்றில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். ஒரே நேரத்தில் ஜெயா டிவி அலுவலகம் ,ஜாஸ் சினிமாஸ், கொடநாடு பங்களா, மிடாஸ் மதுபான ஆலை உட்பட 180க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு ஆரம்பித்தது.
இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரெய்டுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் 1800க்கும் அதிகமான அதிகாரிகள் 250க்கும் மேற்பட்ட கார்களில் ரெய்டுக்கு கிளம்பி இருக்கிறார்கள். கொச்சி, பெங்களூரு உட்பட 6 நகரங்களில் இருந்து ஆணையர்களும்,அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ரெய்டு குறித்து பேசிய தினகரன்
இதுகுறித்து பேசிய தினகரன், இது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை. அரசியல் ரீதியாக எங்களை எதிர்க்க முடியாமல் வருமான வரித்துறையை ஏவி மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்து இருந்தார். பத்திரிகையாளர்கள் பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் கேட்டபோது, அரசியலில் கட்சியே இல்லாமல் இருக்கும் தினகரனைப் பார்த்து மோடி அரசுக்கு என்ன பயம் இருக்கப்போகிறது என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
மாறுவேடத்தில் அதிகாரிகள்
இந்நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. டி.டி.வி தினகரனின் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி தற்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, இது முழுக்க முழுக்க திட்டமிட்டு பழி வாங்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தான். மாறுவேடத்தில் வந்து பிடிப்பதற்கு நாங்கள் ஒன்றும் தீவிரவாதிகள் இல்லை. சசிகலாவும் தினகரனும் அம்மாவுடன் 33 ஆண்டுகாலம் இருந்தவர்கள். அம்மாவின் தைரியம் அவர்களை வழிநடத்தும் எங்களுக்கு எந்தப்பயமும் இல்லை என்றார்.
பாஸ்ட் ட்ராக் கார்கள் எதற்காக ?
வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது கார்களிலேயே வந்து ஆய்வு மேற்கொண்டிருந்தாலும் நாங்கள் எதுவும் செய்திருக்கமாட்டோம். தனியார் நிறுவனத்தில் கார்களை வாடகைக்கு எடுத்து அதில் எதோ கல்யாண போஸ்டர் ஒட்டி வந்திருக்கிறார்கள். அந்தக் கார்கள் அனைத்தும் ரெட்சன் அம்பிகாபதி என்னும் நபருக்கு சொந்தமானவை. அந்த அம்பிகாபதி ம.தி.மு.க.,வில் இருந்து அ.தி.மு.க.,விற்கு வந்தவர். தற்போது ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறார்.
தமிழிசை பூசணிதோட்டத்தை மறைக்கிறார்
அவரிடம் 250க்கும் கார்களை வாடகைக்கு எடுத்து, ரெயின் ட்ரீ ஹோட்டலில் ஆற அமர்ந்து திட்டமிட்டு ரெய்டுக்கு போய் இருக்கிறார்கள். ஆனால், தமிழிசை அவர்கள் தகவல் வந்தது, நடவடிக்கை எடுத்தார்கள், ஆபரேஷன் பிளாக் மணி என்று என்னன்னவோ சொல்லிக்கொண்டு இருக்கிறார். முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாம் ஆனால், தமிழிசை முழுப்பூசணிக்காய் தோட்டத்தையே சோற்றில் மறைக்கப்பார்க்கிறார் என்று சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.