நான் வென்ற தங்கம்.. என் குடும்பத்தைக் காக்கும்... சதீஷ் சிவலிங்கம் நம்பிக்கை!
சென்னை: காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் நான் தங்கப் பதக்கம் வென்றது, எனது குடும்பத்தின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் என்று நம்புவதாக தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் சதீஷ். மேலும் புதிய சாதனையையும் அவர் படைத்தார்.
தற்போது நாடு திரும்பியுள்ள சதீஷ் சிவலிங்கம், இந்தப் பதக்கம் தனது குடும்பத்தின் வறுமை நிலையை அகற்ற உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதல் போட்டி
இதுதான் சதீஷ் சிவலிங்கத்திற்கு முதல் காமன்வெல்த் போட்டியாகும். முதல் போட்டியிலேயே சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளார் சதீஷ்.
ரூ. 50 லட்சம் பரிசு
சதீஷ் சிவிலங்கத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.
கஷ்டமான குடும்பம்
சதீஷின் குடும்பம் சற்று கஷ்டமான நிலையில் இருந்து வருகிறது. அவரது தந்தை காவலாளியாக இருந்து வருகிறார். பெரும் சிரமத்திற்கு மத்தியில்தான் பயிற்சி எடுத்து வந்தார் சதீஷ்.
குடும்ப நிலை மாறும்
இந்த நிலையில் தனது வெற்றி தனக்கும், தனது குடும்பத்திற்கும் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார் சதீஷ். தனது குடும்பத்தின் நிலை மாறி நல்ல நிலை ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.